கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெங்களூருவில் சந்தித்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள், இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தின் தலைமைச் சுருக்கத்தை வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான தேவையை ஜி20 நாடுகள் அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகப்பூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடனாளிகளால் பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, மோசமடைந்து வரும் கடன் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும், கடனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒருங்கிணைந்த கடன் சிகிச்சையை எளிதாக்குவதற்கும் அவசியம்.

சாட் நாட்டுக்கான கடன் மறுசீரமைப்பு முடிவை ஜி20 நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், மற்றும் சாம்பியா மற்றும் எத்தியோப்பியாவிற்கான கடன் மறுசீரமைப்பு பணியை விரைவாக முடிக்க அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வை தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜி20 நாடுகள் தெரிவித்துள்ளன.