உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்புப் பொதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளூடாக வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உள்ளிட்ட ஏனைய அச்சிடும் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று(08) கடிதமொன்று அனுப்பப்படவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிடும் பணிகளுக்காக 400 மில்லியனுக்கும் அதிக தொகை செலவாகும் என மதிப்படப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் பதிலுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு தேவையான மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபரிடம் இன்றும்(08) கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 17 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.