பாதுகாப்பு சபையின் கூட்டம் காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல் நிதியொதுக்கம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கூற்றுகளை உயர்மட்ட தரப்புக்கள் மறுத்துள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்திப்பதற்கான வேறொரு திகதியை அறிவிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தநிலையில் திறைசேரியின், செயலாளரான மஹிந்த சிறிவர்த்தன, கடந்த வாரம் தாம் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பற்கான காரணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை காலை வரை பாதீட்டின் தேர்தல் நிதியை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்ததும், அந்த தீர்மானம் குறித்து சட்டமா அதிபருடன் விவாதிக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர், இது தொடர்பாக பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட வேண்டியிருந்தது.

முன்னதாக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு சபை கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்ட கூட்டத்தின் அதே நேரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, போன்ற காரணங்களை நிதியமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.