தேசிய பாடசாலைகளின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் இடமாற்றத்தினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால், அது தொடர்பில் அதிபரால் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீட்டை விசேட மேன்முறையீட்டுக் குழுவின் மூலம் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து தற்காலிக நியமனங்களும் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டுக்கு உட்படாத ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்களின் இடமாற்றங்கள் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

இதன்போது, ஆசிரியர்களின் இடமாற்றத்தை வருடத்தின் இடையில் செய்வது தவறானது என அவர் குறிப்பிட்டார்.