இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன் உள்ளிட்ட குழாத்தினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக லங்கா IOC அதன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜெக்கட் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதன்போது வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, கொழும்பு நகரை அண்மித்து நிர்மாணிக்கப்பட்ட 03 IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் அண்மையில் திறந்து வைத்துள்ளார்.

மார்ச் மாதம் நிறைவடைவதற்குள் 34 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக லங்கா IOC-இன்  முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.