பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை எழுத்துமூலம் அனுப்ப முடியும் என  நீதி அமைச்சர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாதத் தடை சட்டமூலம் தொடர்பில் எந்த கட்சியுடனும் கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே இதுவரையில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கருத்திற்கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மேலும் ஒத்திவைக்கப்படுவதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.