சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இந்த ஆளுநர்கள் பதவி விலகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்களை நியமிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும்.

சில ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாணங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ளதாகவும், ஜனாதிபதி செயலக உயரதிகாரி கூறினார்.