சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைதியற்ற வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் கலந்துரையாடலை பேஸ்புக் வழியாக நேரலையில் ஒளிபரப்பியிருந்தார்.
இதனையடுத்து பேஸ்புக் நேரலையை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் பணித்துள்ளனர். இதனை மறுத்துத் தொடர்ந்தும் அமர்ந்திருந்த அவர் கூட்ட நிறைவின் போது சுகாதார அமைச்சருடன் உரையாட முற்பட்டுள்ளார்.
எனினும், அமைச்சர் உடனடியாக அங்கிருந்து வெளியேறிய நிலையில் கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்,
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மஹிபால மற்றும் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.