ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார். அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ரிரிஜி ஏசியாவிற்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more
இலங்கையில் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பில் கியூப அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரெஸ் மார்செல்லோ தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கியூப அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்புத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று முற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 966 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளன. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் 7ஆம் 8ஆம் திகதிகளில் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில், மூன்று பேர் மட்டுமே தங்கள் செலவு அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஐ.எம். இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகளை வெளியிடுமாறு கோரியிருந்தார். குறித்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள உதய கம்மன்பில, அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால், தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையில் அரசாங்கம் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்கள் தொடர்பான சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்தமை தொடர்பில் குடிவரவு குடியகழ்வு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.