மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலர்கள் நியமனம்-
அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்றுமுற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அப் பதவியில் இருந்த சித்ராங்கனி வாகீஸ்வர டெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டதுடன் அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதங்களை வழங்கிவைத்ததன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேன, புதிதாக நியமனம் பெற்றுள்ள செயலாளர்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-
நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்றுகாலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து வருகின்றார்கள். பல போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவித முடிவுகளும் கிடைக்காத நிலையில், வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், நல்லூர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, துணுக்காய், தீவகம் உள்ளிட்ட 12 வலயத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். இதேவேளை, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு, போராட்டம் செய்ய வேண்டாமென்று ஆளுநர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார், குறித்த தொண்டர் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்தால், ஆளுநர் அலுவலகத்திற்கு வரமாட்டார் என்றும் பொலிஸார் வாயிலை விட்டு ஒதுக்குப் புறமாக நின்று போராட்டத்தினை முன்னெடுக்குமாறும் கூறினார். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத தொண்டர் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரையில், வாயிலை விட்டு செல்ல முடியாது, என்று வலியுறுத்தினார்கள். இதன்படி, எந்தவித கொடுப்பனவுகளுமின்றி, குடும்ப சுமைகள், மற்றும் மன அழுத்தங்களுடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும், தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குமாறும் வலியுறுத்தி தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
தேசியரீதியில் வவுனியா மாணவி சங்கவி கனகரட்ணம் முதலிடம்-
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்விகற்கும் மாணவி செல்வி சங்கவி கனகரட்ணம் 2016.07.09 அன்று கல்வி அமைச்சு, இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் வடமாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (print script writing) போட்டியில் தரம் 11 இல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இவர் பாடசாலைக்கும், வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலை அதிபர் திருமதி.க. பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க…. Read more