நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஞானசார தேரரை 50,000 ரூபா பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியிலான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்தின் ஊடாக இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.