கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, துப்பாக்கிதாரி என கூறப்படும் சமிந்து தில்ஷான் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் இன்று(04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. Airbus A330 – 200 விமானம் பிரான்ஸின் பாரிஸிலிருந்து இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்தது. இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை துறைமுக நகரத்தின் தெற்கு முனையத்திருந்து மொறட்டுவை வரையிலான கடற்பரப்பின் மேல் இந்த விமானம் 1500 அடி உயரத்தில் பறந்தது.
யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்தார். செம்மணி, சிந்துபாத்தி மயானத்திலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மதுபானச் சட்டத்தை மீறி நிதியமைச்சர் என்ற வகையில் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த அனுமதியை வழங்கியது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ கோப்ரல் ஒருவர் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஏகமனதாக நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்தார். இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலிய துணை பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திக்கவுள்ளதுடன் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.