நன்றி தலைவர் அவர்களே!வெளிவிவகார அமைச்சின் கொள்கை என்பது இலங்கை போன்ற மிகச்சிறிய நாட்டிற்கு மிக அவதானமாக இருக்க வேண்டிய விடயமாகும். இன்று பூகோள வல்லாதிக்க சக்தி ஒன்றே ஒன்றுதான் அது அமெரிக்கா. பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எல்லாம் இங்கு தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்ற இந்த வேளையிலே நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
71ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அன்று சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிய யுத்த விமானங்கள் இங்கு வந்து எரிபொருள் பெற்றுக்கொண்டு மீண்டும் கிழக்கு பாகிஸ்தானுக்கு போகின்ற செயற்பாட்டுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்போது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியமாக எனது தந்தைகூட இது தவறு இதைச் செய்யாதீர்கள், இதனால் இந்தியாவுடன் நீண்டகால பகை ஒன்று வந்துவிடும் என்று மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். ஆனால் அது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
அதன் பிறகு 80களிலே ஜனாதிபதியாக வந்த ஜே.ஆர் ஜெயவர்தன அவர்கள், இந்திரா காந்தியுடன் பகைமை ஒன்றை உருவாக்கி, இந்திரா காந்தியும் அவருடைய மகனும் Cow and a calf என்று கூறி அது பிரபல்யமாக கூறப்பட்டது. அதேபோல சிறீமாவோ பண்டாரநாயக்கவுடன் இருந்த ஆத்திரத்தில், சிறீமாவோ பண்டாரநாயக்கவும் அநுரவும், இந்திரா காந்தி அவர்களும் சஞ்செய் அவர்களும், இப்படியாக பிரச்சினையை உருவாக்கி 83இலே மிகப்பெரிய இனக்கலவரம் ஒன்று உருவானது.
அந்த இனக்கலவரத்தின் பின்பு ஒரு நிலைமை உருவாகியது. அன்று மிக அமைதியான முறையிலே, சாத்வீக முறையிலே போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த தமிழர்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலமையொன்று உருவானது. ஆயுதப் போராட்டத்தை நடாத்துவதற்கான ஒரு நிலைமை அவர்கள்மீது திணிக்கப்பட்டது. இந்தியாவும் அந்த நேரத்திலே ஜே.ஆர் ஜெயவர்த்தனவுடன் இருந்த அந்த பகைமையினால் அல்லது ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கு இந்தியாவுடன் இருந்த பகைமையினால் அது ஒரு மிகப்பெரிய யுத்தமாக வெடித்து மிக நீண்டகாலம் அந்த யுத்தம் சென்று கொண்டிருந்தது.
இதையெல்லாம் நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால், அயல்நாட்டுடன் எவ்வளவு தூரம் நாங்கள் கவனமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. இப்போது இந்தியாவுக்கு எதிராக சீனா இங்கு தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கின்றது. சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ என இந்த வல்லாதிக்க சக்திகளுடன் நாங்கள் எதிர்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று நான் கூற வரவில்லை. நான் கூறுவது, இவர்கள் அனைவரையும் பகைக்காத வகையிலே இலங்கை நடந்துகொள்ள வேண்டும் என்பது. அல்லாதுபோனால் அது நிச்சயமாக எங்கள் அனைவருக்குமே ஆபத்தாக முடியும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் வடகிழக்கிலே வாழுகின்ற நாங்கள் மிகவும் அவதானமாக வாழவேண்டி இருக்கிறது. ஏனென்றால் சீனா இந்தியா வல்லாதிக்க சக்திகளுடைய பிரச்சினை எங்களை மிகவும் பாதித்துவிடும் என்று நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம். ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம், இந்தியா அயல்நாடு, என்ன பிரச்சினை என்றாலும் உடனடியாக இந்தியா வருகின்றது, இதனால் நாங்கள் அவர்களை மேவாமல் சில விடயங்களைச் செய்ய வேண்டியது இந்த நாட்டைப் பொறுத்தமட்டிலே எங்களுடைய ஒரு கடமையாக இருக்கின்றது.
கப்பல்கள் வந்துபோவது, அதுவும் யுத்தக் கப்பல்கள் வந்து போவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். யுத்தக் கப்பல்கள் சீனக் கப்பல்கள் இங்கு வருகின்றபோது எதிர்க்கிறார்கள். யுத்தக் கப்பல் மீன்பிடிக்க வருவதில்லை, அவர்கள் ஏதோவொரு காரணத்திற்காகவே வருகிறார்கள்.
உங்களுக்குத் தெரியும், 22ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சபாநாயகர் அவர்கள் தாய்வானுக்குச் சென்றிருந்தபோது சீனா அதை எவ்வளவுதூரம் எதிர்த்தது என்பது மாத்திரமல்ல தங்கள் கடற்படையை தாய்வானை நோக்கி நகர்த்தியது. அதேபோல யுத்த விமானங்கள் தாய்வானுக்கு மேலால் பறந்து பயமுறுத்துகின்ற ஒரு நிலைமையை செய்தார்கள். இந்தியா அதைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் அதிலே கரிசனையாக இருக்கின்றார்கள். அக்கறையாக இருக்கின்றார்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இந்த நிலைமைகளைத் தவிர்த்து நாங்கள் ஒரு சிறிய நாடு. அது வங்குரோத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது முன்னேறிக்கொண்டு வருகின்ற நாடு. ஆகவே நாங்கள் சரியான முறையிலே வெளியுறவுக் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தவறுவோமேயானால் மிகவும் ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுவோம்.
அமைச்சர் இந்த விடயங்களை கையாளக்கூடியவர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் அவருக்கு உதவியாக அரசாங்கமும் சில விடயங்களைச் செய்ய வேண்டும். இவைகளைத் தவிர்த்து நடப்பதற்கு தொடங்கினால் மிகப்பெரிய பிரச்சினை வரும்.
மீன்பிடிப் பிரச்சினை ஒன்று இருக்கின்றது. மிக அண்மையிலே தமிழ் நாட்டிலே இருந்து நூற்றுக்கணக்கான ரோலர்கள் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது நேரடியாக தனியே மீன்பிடி அமைச்சருடன் கதைப்பது அல்ல. கொள்கை ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கக்கூடிய உறவைக் கொண்டுதான் இவ்விடயத்தைச் செய்ய முடியும். ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த உறவுகளை சரியாகக் கொண்டுவர வேண்டுமென்பதை கூறுகின்றோம். ஏனென்றால் இருபது முப்பது வருடங்களாக இவ்விடயம் பேசப்படுகின்றது. ஒன்றுமே நடக்கவில்லை. தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் எங்களுடைய கரையோரங்களில் வாழக்கூடிய மீனவ சமூகத்தினுடைய முழு வருமானமும் இல்லாமல்போகும். அவர்கள் ஒரு வறுமைக்கோட்டின்கீழ் செல்லக்கூடிய ஒரு நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது.
ஆகவே, அமைச்சர் தனியாக அல்ல, அமைச்சர் வேண்டுமென்றால் நாங்கள் கூட வருவோம். நாங்கள் நேரடியாகக் கதைத்து அதை நிச்சயமாக நிறுத்துவதற்கான முழுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை நாங்கள் நிச்சயம் செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தால் எடுக்கப்பட்ட அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கவனிக்கவும் இல்லை. இப்படியாக சர்வதேசம் கூறுகின்ற விடயங்களையெல்லாம் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டுதான் இந்த நாடு ஒரு மிகக் கஸ்டமான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேசம் சொல்லியிருக்கின்றது.
இப்படியாக எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அவர்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக்கூடிய விதத்திலே ஒரு நியாயமான தீர்வைக் கொடுங்கள். இப்டியான நிலைமைகளை உருவாக்கினால்தான் சர்வதேச ரீதியிலே இந்த நாடு தலைநிமிர்ந்து நிற்கமுடியும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். அப்போதுதான் ஏனைய நாடுகளெல்லாம் இந்த நாட்டுக்கு உதவுவதற்கு முன்வருவார்கள். இதை மிகத் தெளிவாக உணர வேண்டும். இதை செய்ய வேண்டுமென்று கேட்டு முடிக்கின்றேன். நன்றி வணக்கம்