Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்

Sidharthan-D

13.02.2016.
கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி விசேட செவ்வி-
புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்­பினுள் கட்­சித்­தா­வல்கள், வெளிநாட்டுச் சந்­திப்­புக்கள், தென்­னி­லங்­கையின் மாறாத நிலைப்­பா­டுகள், பிராந்­திய, சர்­வ­தேச நாடு­களின் ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ரான நிலைப்­பா­டுகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தமிழ் மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் வழங்­கிய செவ்­வியில்,
தீர்வு விட­யத்தில் அதி­யுச்ச கோரிக்­கை­க­ளையே முன்­வைக்­க­வேண்டும். கட்­சித்­தா­வல்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையை கேள்­விக்­குள்­ளாக்கும் ஆபத்­துள்­ளது. அத­னைத்­த­டுக்­க­வேண்­டிய பொறுப்பு கட்­சித்­த­லை­மை­க­ளுக்கே உள்­ளது. முன்னாள் ஜனாதிப­திக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தினுள் காணப்­படும் ஆத­ரவு, தெற்கு நிலை­மைகள் ஆகி­ய­வற்றை புதிய அர­சாங்­கமும் கவ­னத்தில் எடுத்தே தனது செயற்­பா­டு­களை கருத்­து­க்களை முன்­வைக்கும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்தே சிந்­தித்­துக்­கொண்­டிருந்தேன். அதே­நேரம் தமது நலன்­க­ளுக்­காக பிராந்­திய, சர்­வ­தேச தரப்­புக்கள் எம்மைப் பலி­கொ­டுப்­ப­தற்கு தயங்­க­மாட்­டாது என்­பதை உணர்ந்து கொள்­ள­வேண்டும் எனக் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,
கேள்வி:- இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கொண்­டி­ருந்த ஸ்கொட்­லாந்து விஜயம் எவ்­வாறு அமைந்­தது?
பதில்:- ஸ்கொட்­லாந்தின் தலை­ந­க­ர­மான எடின்­பிரோ சட்­டக்­கல்­லூ­ரியும், இலங்கை குறித்த சர்­வ­தேச செயற்­பாட்­டு­கு­ழு­வினர் உள்­ளிட்­டோரே இவ்­வ­கை­யான கலந்­து­ரையாடலை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இவ்­வா­றான கலந்­து­ரை­யாடல் செப்­டெம்­பரில் இங்கு நடை­பெற்­றி­ருக்­கின்­றது. அதன் தொடர்ச்­சி­யா­கவே இக்­க­லந்­து­ரை­யா­டலும் நடை­பெற்­றி­ருந்­தது.
பிரித்­தா­னி­யாவின் கடு­மை­யான ஒற்­றை­யாட்­சிக்குள் ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­வ­தற்­கான உரி­மை­யு­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வை ஏற்­க­மு­டியும். அதனை தெளிவு­ப­டுத்­தவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அழைத்­துள்­ளார்கள் என்­ற­வா­றான தோற்­றப்­பாடே வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே நாம் ஸ்கொட்­லாந்து உட்­பட பல நாடு­களின் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக கற்­றுக்­கொண்­டி­ருந்தோம். இது முடி­வெ­டுக்கும் கூட்­ட­மல்ல. ஒரு கருத்­த­ரங்­கே­யாகும்.
அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது தொடர்ச்­சி­யான செயற்­பாட்டு ரீதி­யாக நடை­பெ­று­மொ­ரு­வி­டய­மாகும். சமஷ்டி எனப் பேசப்­பட்­டாலும் தற்­போது தனி­ம­னித சமஷ்டி வழ­மையில் பேசப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில், இந்­தக்­க­ருத்­த­ரங்கின் ஊடாக அனு­ப­வத்தை பெறும் வாய்ப்பை பெற்­றி­ருந்­ததேன். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்­பதைக் காட்­டிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­திகள், மத்­திய, தென் மாகாண முத­ல­மைச்­சர்கள் பங்­கேற்­றி­ருந்­தார்கள்.
கேள்வி:- உங்­க­ளு­டைய தலை­மையில் விசேட கூட்­டங்கள் நடை­பெற்­றி­ருந்­த­னவே?
பதில்:- ஆம், புலம்­பெ­யர்ந்த உற­வு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக லண்டன் ஈஸ்தாம் நக­ர­மண்­ட­பத்தில் விசேட பொதுக்­கூட்­ட­மொன்றை கூட்­டி­யி­ருந்தோம். பல்­வே­று­பட்ட பெருந்­தொ­கை­யா­ன­வர்கள் வரு­கை ­தந்­தி­ருந்­தார்கள்.
இலங்­கையில் என்ன நடக்­கின்­றது. நியா­ய­மான தீர்­வொன்று கிடைக்­குமா என்­பதை அறி­வ­தற்­கான ஆர்வம் அவர்­க­ளி­டத்தில் வழ­மையைப் போன்றே காணப்­ப­டு­கின்­றது. அதே­நே­ரம் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கலில் நம்­பிக்­கை­யில்­லாத ஈழப்­போ­ராட்டம் பற்றி பேசு­ப­வர்­க­ளையும் சந்­திக்­கக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.
அமை­தி­யான இலங்­கைக்கு நிரந்­த­ர­மான நியாய­மான தீர்­வொன்று கிடைக்­க­வேண்­டு­மென்­ப­தையே பொது­வாக அனை­வரும் விரும்­பு­கின்­றார்கள் என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஒட்­டு­மொத்­த­மாக இப்­ப­யணம் நன்­மை ­த­ரக்­கூ­டி­ய­தொன்­றா­கவே அமைந்­தி­ருந்­தது.
கேள்வி:- ஸ்கொட்­லாந்தில் காணப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மை­யா­னது தமி­ழர்­களின் தீர்வு விட­யத்தில் எவ்­வ­ளவு தூரம் சாத்­தி­ய­மா­கு­மெனக் கரு­து­கின்­றீர்கள்?
பதில்:- பிரித்­தா­னி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் நீண்­ட­கால ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களில் செயற்­ப­டு­மொரு நாடாகும். அங்கு முற்­போக்­கா­ளர்கள் பலர் காணப்­ப­டு­கின்­றனர். ஒற்­றை­யாட்­சியின் கீழ் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப்­பெ­று­கின்­ற­போது ஏற்­படும் ஜன­நா­யகப் பிரச்­சி­னை­களை சிந்­திப்­பார்கள். இங்கு அவ்­வா­றில்லை.
ஒற்­றை­யாட்­சியின் கீழ் வழங்­கப்­படும் அதி­கா­ரப்­ப­ர­வலாக்­கத்தை இங்­குள்­ள­வர்கள் எவ்­வாறு கையாண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­கான அனுபவம் நிறை­யவே உள்­ளது. குறிப்­பாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் காணப்­படும் அதி­கா­ரங்­களை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஒத்­தி­யங்கு பட்­டியல் ஊடாக மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் என்­ப­வற்றை பார்த்­தி­ருக்­கின்றோம்.
தென்­னி­லங்­கையில் உள்­ள­வர்கள் இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்கள் ஒற்­று­மை­யாக தாமே தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­லக்­கூ­டிய வகை­யில் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் அமை­கின்­றது எனக் கரு­த­வில்லை. தமக்­குள்ள அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்­கின்றோம் என்ற எண்­ணப்­பாட்­டி­லேயே உள்­ளார்கள். காணி அதி­கா­ரங்­களை வழங்­கு­வது தொடர்பில் கருத்­திற்­கொண்டால் சில தென்­னி­லங்கை தரப்­புக்­க­ளுக்கு தனிப்­பட்ட முறையில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.
ஆகவே ஸ்கொட்­லாந்தின் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மையை முழு­மை­யாக இங்கு உள்­வாங்­கி­வி­ட ­மு­டி­யாது. அதனை ஆராய்ந்து எமது நாட்­டுக்கு ஏற்­ற­வ­கையில் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் தொடர்­பான விட­யங்­களை உள்­வாங்க முடி­யு­மெனக் கரு­து­கின்றேன்.
கேள்வி:- தமிழ் மக்கள் பேர­வையில் நீங்­களும் அங்கம் வகித்­தி­ருந்­தீர்கள். அத்­த­ரப்­பினால் வெளிடப்­பட்­டுள்ள தீர் வுத்­திட்ட முன்­வ­ரைபு தொடர்­பான உங் களின் நிலைப்­பாடு என்ன?
பதில்:- தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கிய விட­யங்­களை உள்­வாங்­கி­ய­தா­கவே அத்­தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு காணப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச மத்­தி­யஸ்தத்­துடன் அர­சாங்­கத்­தோடு உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்­டுதல் என்ற விடயம் மட்­டுமே சற்று வேறு­பட்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது. ஏனைய விட­யங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது வரையில் கூறும் விட­யங்­களே உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.
கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஐக்­கிய இலங்­கைக்குள் இணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­யுச்ச சமஷ்­டியே தீர்­வாக முடியும் என்­பதை ஆழ­மாக கூறி­வ­ரு­கின்றார். கிளி­நொச்­சி­யிலும் சரி, எடின்­பி­ரோ­விலும் சரி ஒரே விட­யத்­தையே கூறி­யுள்ளார். அந்த நிலைப்­பாட்டில் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இல்லை.
அவ்­வா­றி­ருக்­கையில் அர­சியல் தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டு­மெனக் கோரும் தமி­ழர்கள் தரப்பில் சரி­யான தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்ற குறை­பா­டுகள் காணப்­பட்­டி­ருந்­தன. அதன்­பி­ர­கா­ரமே மக்­களின் பங்­க­ளிப்­புடன் அர­சியல் தீர்­வுத்­திட்­ட­மொன்றை இறு­தி­செய்­வ­தற்­காக முன்­வ­ரை­பொன்று வெளியி­டப்­பட்­டுள்­ளது.
எமது அபி­லா­ஷைகள் என்ன என்­பதை நாம் வெளிப்­ப­டை­யாகக் கூற­வேண்டும். அத­னவெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். அதில் எந்­த­வி­மான தவ­று­க­ளு­மில்லை. அர­சாங்­கத்­திடம் நேர­டி­யா­கவோ அல்­லது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பனூடா­கவே இவ் முன்­வ­ரைபின் இறு­தி­வ­டிவம் சமர்ப்­பிக்­கப்­படும் போது அதனை அர­சாங்கம் எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.
தற்­போது தனி­ந­பர்­களும் அர­சி­ய­லமைப்பு தொடர்­பான யோச­னை­களை முன்­வைத்து வரு­கின்­றார்கள். என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் எந்­த­வொரு தமிழ்த்­த­ரப்­பாலும் முன்­வைக்­கப்­படும் முன்­வ­ரை­புகள் வேறு­பட்­டி­ருந்­தாலும் அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யங்கள் அடிப்­ப­டை­யி­ல் ஒன்­றாக காணப்­ப­டு­மென்றே நம்­பிக்கை கொண்­டிக்­கின்றேன்.
கேள்வி:- பல தமிழ்த் தரப்­புக்கள் காணப்­படும் நிலையில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பே தீர்­வுத்­திட்டம் தொடர்பில் இறுதி செய்­யு­மெனக் கூறப்­ப­டு­கின்­றதே?
பதில்:- தமிழ் மக்­களின் அதி­க­ளவு ஆணை­யைப்­பெற்ற முக்­கி­யத்­து­வ­மான தரப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே காணப்­ப­டு­கின்­றது. அதில் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை. அர­சாங்கம், சர்­வ­தேச தரப்­புக்கள் ஆகியோர் கூட்­ட­மைப்­பு­ட­னேயே பேசு­வார்கள்.
அவ்­வா­றி­ருக்­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏனைய தரப்­புக்­களால் கூறப்­ப­டு­கின்ற விட­யங்கள் அனைத்­தையும் உள்­வாங்­க­வேண்டும். அவற்றை எடுத்­து­ரைக்­க­வேண்­டிய பொறுப்­புள்­ளது. கூட்­ட­மைப்பு தமிழ்­த­ரப்பால் முன்­வைக்­கப்­படும் முக்­கி­ய­மான விட­யங்­களை நிச்­ச­ய­மாக உள்­வாங்­க­வேண்டும்.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இந்த விட­யங்­களை பிரே­ர­ணை­க­ளா­கவே முன்­வைக்க முடியும். அதன் பின்னர் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெறும். ஆகவே எமது பிரே­ர­ணை­களை உள்­வாங்கும் வரையில் அதற்­கு­ரிய அழுத்­தங்­களை வழங்­கி­ய­வாறே இருக்­க­வேண்டும்.
கேள்வி:- தமிழ் மக்கள் பேர­வையின் முன்­வ­ரை­பா­னது திம்­புக்­கோட்­பா­டு­களை அடி­யொற்­றி­ய­தா­கவே உள்­ளது. ஆகவே திம்பு பேச்­சு­வார்த்­தையில் பங்­கெ­டுத்­தவர் என்ற அடிப்­ப­டையில் அத்­த­கைய தீர்­வா­னது சம­கால சூழலில் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­கு­மெனக் கரு­து­கின்­றீர்­களா?
பதில்:- திம்பு கோட்­பா­டுகள், சுய­நிர்­ணயம், தாயகக் கோட்­பாடு போன்ற விட­யங்­களை நேர­டி­யா­கவே கூறி­யி­ருக்­கின்­றது. தற்­போதும் தாயகக் கோட்­பாடு என்­பதைக் காட்­டிலும் வட­கி­ழக்கு இணைப்பை பற்றி பேசு­கின்றோம். இணைந்த வட­கி­ழக்கு ஒரு­மா­நிலம், அது தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக பூர்­வீ­க­மாக வாழும் பிர­தேசம் எனக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. இதுவே தாயகக் கோட்­பாடு.
நாம் எமது அதி­யுச்­ச­மான கோரிக்­கையை முன்­வைக்­க­வேண்டும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே பேர­வையின் தற்­போ­தைய முன்­வ­ரைபு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் அது­தொ­டர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது எவ்­வா­றான முடி­வுகள் எட்­டப்­ப­டு­கின்­றன. 1972, 1978ஆம் ஆண்­டு­க­ளைப்­போன்று தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­து­வ­மின்றி அர­சி­ய­ல­மைப்புச் சபை அமை­யப்­போ­கின்­றதா என்­ப­தை­யெல்லாம் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.
கேள்வி:- தென்­னி­லங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஒற்­றை­யாட்சி என்­பதை கைவி­டு­வ­தற்கு தயா­ரா­க­வில்லை என்­பதை பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­துள்­ளதே?
பதில்:- தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைக்கும். ஆயு­தப்­போ­ராட்­ட­மற்ற தற்­போ­தைய சூழலில் அதற்கு மேல் எது­வுமே செய்­ய­மு­டி­யாது. அதனை அவர்கள் நிரா­க­ரிப்­பார்­க­ளாயின் சாத்­வீ­க­ரீ­தி­யான, ஜன­நா­யக ரீதி­யான எதிர்ப்­புக்­களை காட்­டு­வ­தற்கு முயல்வோம்.
கேள்வி:- ஆட்­சி­மாற்­றத்தின் பங் கா­ளி­க­ளாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட மைப்பு காணப்­ப­டு­கின்ற நிலையில் ஐ.நா.தீர்­மானம், வடக்கில் இரா­ணுவ பிர­சன்னம், அர­சியல் தீர்வு போன்ற விட­யங்­களில் மாறாத கடு­மை­யான நிலைப்­பா­டு­க­ளையே புதிய ஆட்­சி­யா ளர்­களும் கொண்­டி­ருக்­கின்­றார்­களே?
பதில்:- என்னைப் பொறுத்­த­மட்டில் இத்­த­கைய விட­யங்கள் ஏற்­க­னவே எதிர்­பார்க்­கப்­பட்­ட­வையே. ஏனென்றால் யுத்­தத்தை வெற்றி கொண்­ட­தாக கூறும் முன்னாள் ஜனாதி­ப­திக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தினுள் காணப்­படும் ஆத­ரவு, தெற்கு நிலை­மைகள் ஆகி­ய­வற்றை புதிய அர­சாங்­கமும் கவ­னத்தில் எடுத்தே தனது செயற்­பா­டு­களை கருத்­து­களை முன்­வைக்கும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்தே சிந்­தித்­துக்­கொண்­டி­ருந்தேன்.
எமது அழுத்­தங்கள் குறிப்­பிட்­ட­தொரு எல்­லை­வ­ரையே செல்லும். அது கடந்த கால உண்மை. யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவ்­வா­றி­ருக்­கையில் எமக்­குள்ள வலி­மையின் பிர­காரம் பாதிக்­கப்­பட்ட தரப்­புக்­க­ளுக்­கான நியா­யங்கள், சர்­வ­தேச விசா­ரணை, அர­சியல் தீர்வு தொடர்­பான கோரிக்­கைகள் ஆகி­ய­வற்றில் துளி­ய­ள­வேனும் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்­ளாது செயற்­பட்டு அதி­கூ­டிய அழுத்­தங்­களை வழங்­க­வேண்டும்.
புலம்­பெ­யர்ந்­த­வர்கள் தமது நாடுகள் அர­சாங்­கங்­க­ளுக்கு வழங்கும் அழுத்­தங்கள் உட்­பட அனைத்தும் ஒன்­றி­ணைந்தே அச்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். நாம் எமது கட­மையை சரி­யாகச் செய்வோம். அடுத்து நடை­பெ­று­வதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.
கேள்வி:- இலங்கை – இந்­திய ஒப் பந்­தத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வ­தற்­கு ரிய அழுத்­தங்­களை இற்­றை­வ­ரையில் இந்­தி­யாவால் வழங்க முடி­யா­து­ போயுள்­ளதே?
பதில்:- இந்­தியா இலங்­கையை முழு­மை­யாக பகைக்­கா­ம­லி­ருப்­ப­தி­லேயே கவ­ன­மாக இருக்கும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்கு வாக்­கு­று­தி­களை வழங்­கிய அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ருந்த போதும் இலங்­கையை பகைக்­க­வேண்­டு­மெனக் கரு­த­வில்லை. பின்னர் ஆட்­சியில் இருந்து அகற்­றி­யது வேறு­வி­ட­ய­மாக இருக்­கின்­றது. இருந்­த­போ­திலும் நேரடி­யாக பகைப்­பதை விரும்­ப­மாட்­டார்கள்.
80களில் இந்­தியா சில விட­யங்­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­தது. அவ்­வா­றான நிலை­மைகள் தற்­போ­தில்லை. எந்­த­வொரு நாடும் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தை எதிர்ப்­பதை இறுதி சந்­தர்ப்­ப­மா­கவே வைத்­தி­ருக்கும். தற்­போ­தைய நிலையில் இந்­தியா பொரு­ள­ாதார பலத்தை வலுப்­ப­டுத்தி அத­னூ­டாக நாடு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முனை­கின்­றதே தவிர இரா­ணுவ ரீதி­யாக கட்­டுப்­ப­டுத்­து­வதற்கு விரும்­ப­வில்லை.
கேள்வி:- பிராந்­திய வலய, சர்­வ­தேச நாடுகள் தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் நட்­பு­றவின் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­பட்டு வரு­வ­தனை தெளிவாக அவ­தா­னிக்க முடி­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்­தியா, சர்­வ­தேசம் போன்ற மூன்றாம் தரப்­புகளை முழு­மை­யாக நம்­பி­யி­ருப்­பது எந்­த­வ­கையில் சாத்­தி­ய­மாகும்?
பதில்:- ஆரம்பம் முதல் தமிழ்த்­த­ரப்­புக்கள் சர்­வ­தேசம் சர்­வ­தேசம் எனக்­கூ­று­கின்றோம். நாம் உட்­பட தமிழ்த் தரப்­புக்கள் சர்­வ­தேச அர­சி­யலை சரி­யாக கற்க­வில்­லை­யென்­பதை நான் தற்­போது உணர்ந்­து­கொள்­கின்றேன். எந்­த­வொரு நாடும் தன்­னு­டைய நல­னையே முன்­னி­றுத்தும். அதன்­பின்­னரே ஏனைய விட­யங்கள் தொடர்­பாக கவ­னத்தை செலுத்­து­வ­தற்கு முனையும்.
இலங்­கையில் தமது நலன்கள், இங்­குள்ள பகு­தி­களில் தமக்­கி­ருக்கும் ஆதிக்­கத்தில் குறைவு வந்­து­வி­டக்­கூ­டாது, முக்­கி­ய­மாக சீனாவின் ஆதிக்கம் வந்­து­வி­டக்­கூ­டாது, எவ்­வாறு அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வது, அதற்­காக எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­ப­தி­லேயே குறி­யாக இருப்­பார்கள். அதற்­காக எம்மைப் பலி­கொ­டுப்­ப­தற்கு அவர்கள் தயங்­க­மாட்­டார்கள். இதனை நாம் நன்­றாக உணர்ந்­து­கொள்ள வேண்டும்.
இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்டால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்­மக்­களின் செயற்­பா­டுகள், அவர்­களின் ஆதிக்­கம் கார­ண­மாக முற்­று­மு­ழு­தாக எம்மை கைவிட்டுச் செயற்­பட முடி­யா­தி­ருப்­பதன் கார­ணத்தால் சில விட­யங்­களை எமக்கு சாத­க­மாகச் செய்ய முயற்­சிப்­பார்கள்.
இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்குள் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு எவ்­வாறு தீர்வை எட்­டலாம் என்­பதைக் கருத்திற் கொண்டு அதற்­கு­ரிய வகையில் நகர்த்­தல்­களை செய்­ய­வேண்டும்.
கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டி என்ற சொற்­ப­தத்தை நேர­டி­யாக பயன் ப­டுத்­து­வதா இல்­லையா என்­ற­தொரு சர்ச்சை காணப்­ப­டு­கின்ற நிலையில் உங்­க­ளது நிலைப்­பாடு என்­ன­வா­க­வுள் ளது?
பதில்:- ஒற்­றை­யாட்­சியின் கீழ் அர்த்­த­முள்ள அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தைச் செய்­ய­மு­டி­யாது. அவ்­வாறு செய்­யப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அந்த அதி­கா­ரங்கள் மீது மத்­திய அர­சாங்கம் தலை­யீடு செய்­வ­தற்­கான நிலை­மைகள் காணப்­படும். 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­ சபைச் சட்­டங்­களில் அந்த நிலை­மை­களை உணர்ந்­தி­ருக்­கின்றோம்.
ஆகவே சமஷ்டி அமைப்பு எனக்­கூ­று­வ­தற்கும் சமஷ்டி அமைப்பின் தன்மை இருப்­ப­தெனக் கூறு­வ­தற்கும் பாரிய வேறு­பாடு இருக்­கின்­றது. ஆகவே தான் சொற்­ப­தங்களை நேர­டி­யாக பிர­யோ­கிக்­க ­வேண்­டு­மென்­பதில் தீவி­ர­மாக இருக்­கின்றோம்.
கேள்வி:- தற்­போ­தைய நிலையில் தமிழ்த்­த­ரப்பின் கோரிக்­கை­களை உட ன­டி­யாக மேற்­கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது. கடும்­போக்­கா­ளர்­களின் அல்லது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் ஆதிக்கம் மேலெ­ழுந்து விடு­மென புதிய ஆட்­சி­யா­ளர்கள் காரணம் கூற ஆரம் பித்­துள்­ளார்­களே?
பதில்:- தற்போதல்ல பண்டா -– செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது முதல் அதற்கடுத்த நடவடிக்கைகளுக்கும் இவ்வாறே காரணம் கூறப்பட்டது. ஆகவே இவ்வாறு காரணம் கூறிக்கொண்டிருப்பார்களாயின் இந்த நாட்டில் நியாயமான விடயமொன்றை செய்யமுடியாது போய்விடும். தமிழர்களின் விடயத்திலேயே இவ்வாறான காரணத்தை கூறுகின்றார்கள். ஏனைய தமக்கு தேவையான விடயங்களில் அவ்வாறு காரணங்களை ஒருபோதும் அவர்கள் கூறுவது கிடையாது.
கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்டமைப்பாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சி ஒருதரப்பாகவும் இரண்டு பங்காளிக்கட்சிகள் வௌ;வேறு தரப்பாகவும் செயற்படும் நிலைமைகளை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிக்கின்றதே?
பதில்:- அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் அவ்வாறான வேறுபாடுகள் எதுமில்லை.
கேள்வி:- அரசியல் கோரிக்கைகளில் அல்ல, செயற்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே? உட்பூசல்கள், மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றனவே?
பதில்:- செயற்பாடுகளில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியினூடாக ஆசனத்தைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான கூட்டமைப்பிற்கு ஏற்றவிடயமல்ல. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவ்வாறான நம்பிக்கைக்கு இடமளிக்ககூடாது. கருத்து வேறுபாடுகள் காணப்படுவது வேறு. ஆனால் தீர்வு என்ற விடயத்திற்குச் செல்லும்போது அடிப்படையில் ஒன்றுபட்ட பூரணமாக நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டும்.
தமிழ் மக்களின் நீண்ட உரிமைப்போராட்ட வரலாற்றுடன் தொடர்பினைக் கொண்டிருக்காதவர்கள் அமைதியான சூழலில் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புதியவர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பதை நாம் வரவேற்கின்றோம். அவ்வாறானவர்கள் தனிநலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. அவ்வாறான தீர்மானங்கள் கட்சிவிட்டுக் கட்சிமாறும் நிலைக்கும் வித்திடுகின்றன. கட்சி விட்டுக் கட்சி மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு அந்ததந்த கட்சிகளும் தலைமைகளுக்கும் உள்ளது.
அதேநேரம் கூட்டமைப்பாக இருக்கும்போது பங்காளிக்கட்சிகளிடையே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதானது கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கிவிடும் ஆபத்துமுள்ளது. (நேர்காணல் : ஆர்.ராம்) வீரகேசரி 13.02.2016.
ஒற்றையாட்சிக்குள் நியாயமான அதியுச்ச அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு எனவும் குறிப்பிட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றே குறிப்பிட்டு வருகின்றன. ஒற்றையாட்சிக்குள் 60 ஆண்டு காலமாக புரையோடிப்போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியாது என்பது வெளிப்படையானது. அதேநேரம் ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதென்பதும் சாத்தியமற்ற விடயம். குறிப்பாக கடந்த காலங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாண சபைக்கு மறுக்கப்பட்ட நிலையில் ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத் தரப்பின் தலையீடுகள் அதிகமாகக் காணப்பட்டன.
அதேபோன்று ஒற்றையாட்சி முறைமையில் உள்ளுராட்சி நிர்வாக நடவடிக்கைகளை தலையீடுகள் இன்றி மேற்கொள்வதென்பதும் நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும். ஆகவே ஒற்றையாhட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் நியாயமான தீர்வு என்பது ஒருபோதும் கிடைக்க முடியாதவொன்று.
தந்தை செல்வநாயகம் இவ்விடயத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணத்தினாலேயே அவர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதனடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறைமையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வைக் கோரியிருக்கின்றது என்றார்.
மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-
ஞாயிறு தினக்குரலுக்கு (01.06.20014) வழங்கிய பேட்டி
இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சமிக்ஞையாக தோன்றும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்பதை கடந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளதுடன், அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டிவரும் சூழ்நிலையில், மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் எனவும் இதுவே இன்று தமிழ்நாட்டினதும் புதிய மோடி அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சிறிதுகாலம் விஜயம் செய்து அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தி, சமகால அரசியல் நிலைமை பற்றி அறிந்து நாடு திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரலுக்கு (01.06.20014) வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவருடனான பேட்டி வருமாறு: (ந.லெப்ரின்ராஜ்)
கேள்வி: உங்களுடைய இந்திய விஜயம் தொடர்பில்….
பதில்: நான் இந்தியாவுக்கு சென்றநேரம் அங்கு தேர்தல் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்தபடியால் என்னால் அரசியல் முக்கியஸ்தர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இருந்தபோதும், பாரதீய ஜனாதக் கட்சியுடன் தொடர்புடையவர்களை சந்தித்து பேசக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தைகளில் புதிய அரசாங்கம் ஆசிய நாடுகளுடன் ஒற்றுமையாகச் செல்லும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ள அதேவேளை, சீனாவுடன் தங்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் அக்கறையாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இலங்கையுடன் ஒற்றுமையாகச் செல்ல வேண்டுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் அக்கறையாக இருப்பதாக கூறப்பட்டது. இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான மோடியின் முதல் சந்திப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது, 13ஐத் தாண்டி செல்லுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு கூறப்பட்டிருக்கிறது. அதேபோன்று புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சுஷ்மா ஸ்வராஜூம இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில், 13பிளஸ் பற்றி கூறியிருந்தார். ஆகவே, இந்தியாவின் புதிய அரசாங்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்பதில் புதியதொரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இந்தியாவை இவ்வளவு காலமும் ஆட்சிசெய்த தலைவர்களுள் மோடி மிகவும் வித்தியாசமானதொரு தலைவர் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது. அது உண்மை என்பதை அவருடைய பதவிப் பிரமாண நிகழ்வு உலகுக்கு எடுத்துக்காட்டியது.
மோடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய முதல் சந்திப்பிலேயே தமிழர் விவகாரத்தை எடுத்துப் பேசியிருப்பதால் நிச்சயமாக அவ் எமது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: தமிழர் விவகாரத்தில மோடி அரசுடன் சேர்ந்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் பணியாற்றுவதற்கான அல்லது அழுத்தத்தை கொடுக்கும் சூழ்நிலை தமிழ் நாட்டில் இருக்கிறதா?
பதில்: தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலிதாவுக்கும் மோடிக்கும் இடையில் நல்லதொரு நட்பு தேர்தலுக்கு முன்னரிலிருந்தே இருந்து வருகிறது.
ஆகவே, இந்த நட்பு ரீதியான தொடர்பை எமது பிரச்சினை விடயத்தில் ஜெயலலிதா பாவிப்பார் என்று நாம் நம்புகிறோம். அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பெரியதொரு ஆர்வத்தைக் காட்டி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் முமம்முரமாக அவர் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயலலிதாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடனும் என்னுடைய இந்திய விஜயத்தின்போது பேசக்கூடியதாக இருந்தது. அவர்களும், இலங்கை; தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் மிகவும் அக்கறையுடன் ஜெயலலிதா உள்ளார் எனத் தெரிவித்திருந்தனர்.
ஆகவே, மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
மேலும், தமிழ்நாட்டில் தான் ஒரு மிகப்பெரிய சக்தி என்பதையும் தன்னை ஒதுக்கிவிட முடியாது என்பதையும் இம்முறைத் தேர்தலில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஆகவே, அவருக்கு கிடைத்துள்ள தமிழ் நாட்டின் செல்வாக்கு இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல்தீர்வு விடயத்தில் பெரியதொரு பங்கை வகிக்கும்.
கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. மோடியுடனான சந்திப்பின் பின்னரும் அரசு இதனை கூறியுள்ளது. இதுபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: கடந்த மூன்று வருடகாலமாக இதைத்தான் அரசாங்கம் கூறிக்கொண்டு வருகிறது. இவ்வாறு கூறுவதன்மூலம் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கெல்லாம் தாம் இடம் கொடுக்கவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கான அரசின் தந்திரோபாய நடவடிக்கை என்றே நாம் பார்க்கிறோம்.
எந்தவொரு சர்வதேசத்துக்கும் தாம் அடிபணியாத சிங்கள தேசியக் கட்சி என்பதை சிங்கள-பௌத்த மக்களுக்கு காட்டி அவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களை தவிர்த்து தொடர்ந்தும், ஆட்சிக் கட்டிலிலிருக்கும் ஒரு தந்திரோபாய நடவடிக்கையே சர்வதேசத்தின் அழுத்தங்கள் வரும்போது பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற விடயத்தை எடுப்பதற்கான காரணம்.
இருந்தபோதும், மோடியின் அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கம். அதனை உடனடியாக பகைத்துக் கொள்ளும் விதத்திலான நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்யாது என்றே நான் நம்புகிறேன். அவ்வாறு பகைத்துக் கொள்ளவும் இயலாது.
பதவிப் பிரமாண நிகழ்வில் மோடி அரசு ஒரு விடயத்தை காட்டியிருக்கிறது. அதாவது, சார்க் நாடுகளின் வழிகாட்டி இந்தியாதான் என்பதை உலகுக்கு காட்டியிருந்தது. மேலும், முதல் சந்திப்பிலேயே இலங்கை ஜனாதிபதிக்கு கூறப்பட்டிருக்கும் 13இற்கு அப்பால் என்ற விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லதொரு சமிக்ஞை.
மேலும், இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு ஒரு சிநேகபூர்வமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதுவும் நல்லதொரு விடயம் தான். இவ்வாறான சிநேகபூர்வமான சந்திப்பின் மூலம் கூறப்பட்டிருக்கும் விடயத்தை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாததொரு சூழலையும் ஏற்படுத்தலாம். ஆகவே, மோடி – இலங்கை ஜனாதிபதி ஆகியோரின் முதல் சந்திப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு ஆரோக்கியமான சந்திப்பாகவே அமைந்துள்ளது.
கேள்வி: மோடியின் பதவிப் பிரமாண வைபவத்துக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்ததற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பல போராட்டங்களும் இடம்பெற்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மட்டுமல்ல, பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காகவும் இந்தியாவின் வடக்கிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. என்னைப் பொறுத்தவரை மோடி அரசு சார்க் நாடுகளுக்கு இந்தியாதான் வழிகாட்டி என்பதை நிரூபிப்பதற்கு விரும்பியிருந்ததால் தான் சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்திருந்தது. அதனால் தான் அவர்கள் மாநிலங்களின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்பதே என்னுடைய எண்ணப்பாடு.
கேள்வி: இந்தியாவின் புதிய அரசுடன் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இந்தியாவின் புதிய அரசாங்க உறுப்பினர்களுடன் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பல காலமாகவே நல்லதொரு உறவுமுறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே, அந்த உறவை மேலும் வலுப்படுத்தி தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் மோடி அரசாங்கம் ஆகக் கூடுதலான அக்கறையும் கவனமும் எடுக்கக்கூடிய வகையிலான நிலைமை ஒன்றை உருவாக்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை. அதனை படிப்படியாகச் செய்வோம்.

தேர்தலைப் பாதிக்கும் வகையில் இராணுவத் தலையீடு தொடர்கிறது

வெலிவேரிய உயிரிழப்பு சம்பவத்தை பெரியதொரு விடயமாக எண்ணி சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிடும் சிங்களக் கட்சிகள், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்த போது ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கேள்வியெழுப்பிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன், இனிமேலாவது எல்லாச் சம்பவங்களையும் சேர்த்து விசாரிப்போம் என்று இவர்கள் கூறுவார்களா? என்றும் வினவினார்.

18.08.2013 ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் விபரம் வருமாறு;

கேள்வி: இலங்கை வரவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு கூட்டமைப்பினருக்கு இருக்கிறதா?

பதில்: ஆம். தமிழ் மக்கள் இந்நாட்டில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்துக்கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: எவ்வாறான விடயங்களை அவரிடம் நீங்கள் முன்வைக்க இருக்கிறீர்கள்?

பதில்: முக்கியமாக நாம் அடிக்கடி பேசிவரும் விடயங்களான இளைஞர்களின் விடுதலை பற்றி பேசவிருக்கிறோம். முதலாவதாக தடுப்புக்காவல்களில் நீண்டகாலமாக விசாரணைகளின்றி இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இன்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடகிழக்கில் உளவியல் ரீதியாக அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன அவை பற்றியும் மேலும், காணிபறிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல விடயங்கள் குறித்தும் பேசவிருக்கிறோம். இவை பலமுறை கூறப்பட்ட விடயங்களாக இருப்பினும், திரும்பத் திரும்ப இவற்றைக் கூறினால் தான் அவர்கள் இவ்விடயங்களை தமது கவனத்தில் சரியாக எடுத்து அதற்கு ஒரு சரியான தீர்வை எமக்குப் பெற்றுத் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வரும் கூட்டமைப்பு வேட்பாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில்: அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் வரும்போது அது குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுவிடமும், தேர்தல் ஆணையாளரிடமும் பொலிஸாரிடமும் அறிவிக்கிறோம். இதைத்தான் எம்மால் முதலாவதாக செய்யக்கூடியதாக இருக்கிறது. இதைவிட மிகக்கூடிய அச்சுறுத்தல்கள் வரக்கூடிய வேளையில் தான், மேலதிகமாக என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என யோசிக்கலாம்.

கேள்வி: வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது. இது தேர்தல் வாக்களிப்புத் தினத்தில் எவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இது தொடர்பில் நாம் சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் பேசியிருக்கிறோம். உண்மையில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள், தேர்தல் விடயங்களிலும் மக்களையும், வேட்பாளர்களையும் நேரடியாக பாதிக்கும் வகையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டுமாயின் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். ஆனால், அரசு இதை தங்களால் முற்றுமுழுதாக செய்ய முடியாது என்று கூறுகின்றது. இருந்தபோதும், இது தொடர்பில் நாம் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். இது தொடர்பில், சர்வதேசம் நேரடியாக தலையிடாவிட்டாலும் மறைமுகமாக அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் இராணுவத்தினரின் தலையீடு முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: தெற்கில் முஸ்லிம் பள்ளிகளை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் சிங்களக் கடும் போக்காளர்கள் வடக்கில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்புக் காட்டாமல் இருப்பது ஏன்?

பதில்: யுத்தம் முடிவடைந்ததன் பின் வடக்கு, கிழக்கிலே பெருமளவான விகாரைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே இவற்றுக்கெதிராக நான் கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பது புத்தபெருமானை அவமதிக்கும் செயல்’ என்று கூறியிருக்கிறேன். இதுவொரு ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன். “யுத்தத்தில் வென்றுவிட்டோம்; நீங்கள் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம்’ என்ற மமதையிலே செய்யும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இதை நான் பார்க்கிறேன். பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு செய்கிறது. அதிலொன்றுதான் இதுவும். பல புத்த விகாரைகள் வட, கிழக்குப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்தாலும் வழிபடுவதற்கு ஆட்களில்லாமல் அவை வெறுமையாகவே காணப்படுகின்றன. பௌத்தர்கள் இருந்தால் அங்கு ஆலயம் அமைப்பதை ஏற்றுக்கொள்ளலாம். இது குறித்து நாம் பேசினால், பௌத்த தலைவர்கள், கொழும்பு, காலியில் இந்தக்கோயில்கள் இருக்கும்போது நாம் வட, கிழக்குப் பகுதியில் பௌத்த விகாரைகளை அமைத்தால் என்ன? என்று கேட்கிறார்கள். கொழும்பிலும் காலியிலும் இராணுவமோ அரசாங்கங்களோ இந்துக்கோயில்களை அமைக்கவில்லை. அவற்றை அந்தந்த பிரதேசங்களில் வாழ்ந்த இந்து மக்கள் தாங்கள் வழிபடுவதற்காக அமைத்தார்கள் ஆனால், வடகிழக்கில் புத்த விகாரைகள் அமைப்பது அவ்வாறல்ல. இவற்றை இராணுவம் எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் அமைக்கின்றது. அதையே நாம் எதிர்க்கிறோம்.

கேள்வி: வவுனியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனரா?

பதில்: அனைவரும் மீள்குடியேற்றப்படவில்லை. சிறுதொகையினர் மெனிக் முகாமில் இன்னும் இருக்கிறார்கள். எத்தனைபேர் அங்கு இருக்கிறார்கள் என்று அதிகமானோர் அவரவர் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை. மிகப்பெரும்பான்மையான மக்கள் இன்றும் எந்தவொரு வசதியுமில்லாது சிறு குடிசைகளில் மிகவும் கஷ்டமானதொரு நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுத்திட்டங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்திய வீட்டுத்திட்டங்கள்கூட மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. இந்திய வீட்டுத்திட்டத்தில் கூட அரசு பலதடைகளைச் செய்து வந்தது. தற்போது இந்தியா அந்த மக்களுக்கு பணத்தை கொடுத்து வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இந்த அரசு இன்றுவரை மக்களுக்கு எந்தவொரு வீட்டையும் கொடுக்கவில்லை. அழிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இதுதான் இன்றைய அவர்களின் நிலைமை. இன்று வன்னியிலே பல குடும்பங்கள் பெண்களை தலைமையாகக் கொண்டுதான் இருக்கின்றன. ஆண்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். அதனால் பெண்கள் தலைமை தாங்கி தமது குடும்பங்களை மிகவும் கஷ்டப்பட்டு வழிநடத்துகிறார்கள். இக்குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றன. இவர்களுக்கு உதவிசெய்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென்ற கடமை அரசுக்கு இருந்தாலும், அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகளை அபிவிருத்தி செய்வதிலும் மின்சாரத்தை வழங்குவதிலுமே அரசு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. சுகாதார வசதிகளை வழங்குவதிலோ அல்லது அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலோ அரசு ஒரு துணியளவுகூட அம்மக்களுக்கு உதவமுன்வரவில்லை. இன்று இவற்றைப் பார்த்து அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுப்பது நிச்சயமாக எங்களுடைய கடமையாக இருக்கிறது. இவ்விடயங்கள் தொடர்பில் நான் சம்பந்தனுடன் கதைத்திருக்கிறேன். அவரும் மாகாண சபைத் தேர்தலுக்குப்பின் அரசின் நிதியில் தங்கியிராமல் கூடியளவுக்கு எமது வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளான புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்று அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் காட்டுகிறார். எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் பிரச்சினையை நாம் எடுத்துச் செல்கிறோமோ, அதேயளவு வேகமாக இந்த மக்களின் அடிப்படைத் தேவைப் பிரச்சினையையும் எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இன்று இருக்கிறோம்.

கேள்வி: மீள்குடியேற்றம் சரியாக இன்றும் இடம்பெறவில்லை என்று கூறினீர்கள். இது மாகாண சபைத்தேர்தலில் எவ்வாறானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: நிச்சயமாக வாக்களிப்பு வீதம் குறையும். அதேபோன்று அவர்கள் மத்தியில் வாக்களிப்பதன் மூலம் என்ன பிரயோசனம் இருக்கிறது? என்றதொரு எண்ணப்பாடு தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று அந்த மக்கள் இன்று பலவீனமானதொரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை அரசு நிச்சயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இவற்றையெல்லாம் மீறி அவர்கள் தமது வாக்குகளைச் சிதறாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வைப்பது என்பது ஒரு பெரிய விடயமாகும். அதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம்.

கேள்வி: கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் உங்களது கட்சி எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் செயற்பட்டு வருகிறோம். அதேபோன்று சட்டரீதியாக கொழும்பில் இருக்கும் வழக்கறிஞர்கள் குறிப்பாக சுமந்திரன் போன்றவர்கள் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் சர்வதேசங்களில் இருந்து வருகின்ற தூதுவர்கள், பிரதிநிதிகளை சந்திக்கின்ற பொழுது இதுதொடர்பில் அவர்களிடம் எடுத்துக் கூறிவருவதுடன், அவர்களை விடுதலை செய்விப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

கேள்வி: யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கல்வி எவ்வாறானதொரு நிலைமையில் உள்ளது?

பதில்: யுத்தத்தின் பின்னர் எமது குழந்தைகள் கல்வியில் ஒரு நாட்டம் கொண்டுள்ளார்கள். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் மின்சாரம் இல்லாத நிலையில் கூட விளக்கை வைத்து படித்து ஓரளவுக்கு நன்றாக கல்வியில் முன்னேற்றம் காட்டுகிறார்கள். இதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இருந்தபோதும், இதுபோதாது. இன்றைய அவர்களின் வறுமையான சூழ்நிலையில் பல பிள்ளைகள் பசியுடன் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். இதனால் படிப்பில் சரியாக நாட்டம் காட்ட முடியாது. தவிக்கிறார்கள். இதற்கு உணவு கொடுப்பதாலோ அல்லது உடைகளை கொடுப்பதாலோ தீர்வை ஏற்படுத்த முடியாது அந்த குடும்பங்கள் சொந்தக்காலில் நின்று வாழக்கூடிய வகையில் வாழ்வாதாரத்தை கொடுக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தினால் அவர்கள் தாங்களாகவே முன்னேறி விடுவார்கள். கையேந்தி வாழும் நிலைமையை நாம் மாற்றவேண்டும். அந்நிலைமை நீண்டகாலத்திற்குச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லவும் முடியாது. இதை மாற்றுவதற்கான நடவடிக்கையை நாம் நிச்சயமாக எடுக்கவேண்டும். இன்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோரைச் சந்தித்து எமது மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் குறித்து பேசி ஒருசில வேலைகளைச் செய்து வருகிறோம். நாம் மட்டுமல்ல, பலர் இவ்வாறான செயல்களை செய்து வருகிறார்கள். இருந்தபோதும் இவை போதாது. வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எண்ணியுள்ளோம். குறிப்பாக கல்வியில் கவனம் செலுத்தவிருக்கிறோம். இன்று நாம் மிகவும் பின்தள்ளிய நிலையிலேயே இருக்கிறோம். ஆகவே, கல்வியின் மூலமே நம் முன்னேறமுடியும்.

கேள்வி: நாவற்குளி விகாரை மீதான தாக்குதல் குறித்து?

பதில்: இன்று வடக்கிலே வாழுகின்ற தமிழர்கள் இருக்கும் மனநிலையில், எந்தவொரு தமிழராலும் நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. இது தேர்தலுக்காக அல்லது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை தக்க வைத்திருக்க வேண்டியிருப்பதற்காக ஏதாவதொரு குழுவால் செய்திருக்கக்கூடிய விடயமாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி: வெலிவேரிய சம்பவம் பற்றி…?

பதில்: வெலிவேரியாவில் நடந்த சம்பவம் பற்றி சிங்களக்கட்சிகள் எவ்வளவு தூரம் மிகவும் ஆக்ரோஷமாக சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிட்டார்கள். ஆனால், எங்களுடைய தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்தபோது இவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள். இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அல்லது ஏனைய சிங்களக் கட்சிகளாக இருக்கட்டும். இவர்கள் இந்த வெலிவேரிய சம்பவத்தை ஒரு பெரிய விடயமாக காட்டுகிறார்கள். அச்சத்தில் மூன்றுபேர் இறந்தாலென்ன, முப்பது ஆயிரம் பேர் இறந்தாலென்ன அப்பாவி மக்கள் இவ்வாறு இறப்பது ஒரு பிழையான விடயம். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெலிவேரிய சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதேநேரத்தில் இதைக்கண்டித்தவர்கள் எமது மக்கள் உயிரிழந்தபோது கண்டிக்காததையே தவறு என்று கூறுகிறோம். இன்றாவது இவர்களுக்கு தெரிந்திருக்கிறது நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கிறதென்று. ஆகவே, இனியாவது உணர்ந்து எல்லாச் சம்பவங்களையும் விசாரிப்போம் என்று கூறுவார்களா? இன்றுவரை அவ்வாறானதொரு கருத்தை யாரும் வெளியிடவில்லை.

கேள்வி: முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது பற்றி…?

பதில்: தமிழ் மக்கள் அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஒருவிதமான மனரீதியான பயத்தை உருவாக்கி இந்த நாட்டில் நீங்களும் இரண்டாம் தர பிரஜைகள் தான் என்பதை ஞாபகப்படுத்தி வைத்திருப்பதற்கும், தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள் இவை பற்றி சிந்திக்கக்கூடாது என்பதை ஞாபகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே நான் இவற்றைப் பார்க்கிறேன்.
20.06.2013 யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது
சரியான வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-
வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின் உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு நிற்கின்ற ஒரு வேட்பாளரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவை பின்வருமாறு,
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மன்னாரில் முஸ்லீம் மக்களையும், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்களையும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களி;ல் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மாவட்டமாக மாறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அண்மையில் வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில்கூட சிங்கள குடியேற்றங்கள், இராணுவக் குடும்பங்களுக்கான குடியிருப்புக்கள் போன்றன அமைப்பது இந்த குடிப்பரம்பலை மாற்றும் வேலையாகவும் அமையலாம். இது தொடர்பில் ஐரோப்பிய தூதுவர்களுக்கு நாம் தெரிவிக்கும்போது,அதன் தார்ப்பரியத்தை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்களில்லை. அரசாங்கம் தற்போது எதற்கெடுத்தாலும் தெரிவுக்குழு என்று சொல்லி வருகின்றது. இந்த தெரிவுக்குழுவிலும் நியாயம் கிடைக்கும் என சொல்லி வருகின்றது. இதற்குள் கூட்டமைப்பு சென்று இதில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும். தெரிவுக்குழுவில் நியாயமான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளது. புத்திசாதுரியமாக செயற்படுவதாக நினைத்துக் கொண்டிருந்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு செல்லாது. சர்வதேசத்தின் தலையீடுகள் நிச்சயம் இருக்கும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டித் தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. 1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என சொல்லுமளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.
தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களின் இந்தச் செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாக அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது.
இன்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அது எவ்வளவு நடமுறைச் சாத்தியமானது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிலவேளைகளில் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் சீனாவைக் காட்டியே மஹிந்த ராஜபக்ஷ தனது காரியங்களை நடத்தி வருகின்றார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை எம்மிடம் வழங்கியிருந்தார். அதற்கு எதிர்மாறாக அவர் இப்போது செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தினையும் புலிகளையும் காட்டி சிங்கள மக்களை தன்வசப்படுத்தி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற தீர்வாக சமஷ்டி தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால், அது வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான வாய்ப்பைக் கொடுத்துவிடும். வட மாகாணசபை தேர்தலில் அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பலத்தினைப் பெறவேண்டும்.
உள்ளுராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளே காரணமாக அமைகின்றன. உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினைப்படுவதினாலேயே உள்ளுராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது. அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே மிகவும் அவசியமானதாகும். சரியான முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெறும். தற்போது கூட்டமைப்பிற்குள்ளான ஒற்றுமை போதாது. எனவே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதற்கான சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின் உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு நிற்கின்ற ஒரு வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.20.06.1013
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (12.05.2013)தமிழ் தந்திக்கு வழங்கிய செவ்வி
வெளிநாடு ஒன்றில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியா பறித்தமையே எமது இயக்கம் பலவீனப்படுவதற்கு காரணம்
‘புளொட்டினால் வெளியிடப்பட்ட ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல் இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும் புளொட்டின் ஆயுதப்போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் எமது பின்னடைவிற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது.’
கேள்வி:- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழ்தேசியக்கூட்டமைப்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை ஊடகங்களில் கூட வெளிவந்திருக்கின்றன. அவை கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள் அல்ல. அவை நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளாகவே காணப்படுகின்றன. எமது கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டுவருடங்களிற்கு முன்னதாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுடனேயே கூட்டமைப்புடன் இணைந்துகொண்டோம். தமிழ் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கவேண்டும் ஒரு பலமான கூட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்ம் என்ற ஒரேயொரு நோக்கத்துடனேயே இணைந்துகொண்டோம். நாங்கள் தனிப்பட்ட எந்த ஒரு விடயத்தையும் முன்வைத்திருக்கவில்லை. குறிப்பாக தேர்தலில் கூட எமக்கு வேட்பாளர்கள் இத்தனை பேர் வேண்டும். பல இடங்களில் போட்டியிடவேண்டும் என நாம் பெரியளவில் கோரியிருக்கவில்லை. அவர்கள் கூட அதனை தரவுமில்லை. கூட்டமைப்பினுள் ஒரு ஒற்றமை கொண்டுவரப்பட வேண்டும் என்பதன் காரணத்தால் அதனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுக்கவில்லை. அவ்வாறு ஒரு ஒற்றுமையை கட்டியெழுப்புவதாயின் சரியான ஒரு அமைப்பு கூட்டமைப்பிற்கு வழங்கப்படவேண்டும். இதனையே நாம் நீண்டகாலமாக கேட்டுக்கொண்டிருக்கின்றோம். இதனை நாம் மத்திரமின்றி எமக்கு முன்னதாகவே கூட்டமைப்பில் காணப்படும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இது தேர்தலை அடிப்படையாக வைத்து கோரப்படும் விடயமல்ல. தமிழ் மக்களுக்காக தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்போதைய கடினமான நிலைமையில் தமிழர்விடுதலைக்கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் கூட தமது கட்சி நலனை எல்லாம் பின்தள்ளி தமிழர் கொங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பவற்றை இணைத்து தமிழர்விடுதலை கூட்டணியாக முன்னிறுத்தி செயற்பட்டார்கள். அது மிகப்பலம் பொருந்திய சாத்வீக விடுதலை இயக்கமாக மக்கள் மத்தியில் உருவாக்கம் பெற்றது. ஆனால் இன்றிருக்ககூடிய நிலைமையில் ஒரு ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுடைய விடுதலையை நோக்கிநாம் முன்னேற வேண்டுமாயின் ஒரு பலம்பொருந்திய அமைப்பு அவசியமாகின்றது. தனித்தனிக்கட்சியாக தம்மை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு மாத்திரம் கூட்டமைப்பு என கூறிநின்றால் நியாயமான தீர்வை நோக்கி செல்வதில் பாரிய பின்னடைவு ஏற்படும். ஆகவே தான் இன்று இந்த விடயத்தை கருத்தில் கொண்டு பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலர் இதில் தலையிட்டு பேசிக்கொண்டிருக்கின்றார்கள். முடிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.
கேள்வி:- மன்னார் ஆயர் ஊடாக உங்களுடைய கட்சி உட்பட நான்கு கட்சிகளின் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன?
பதில்:- மன்னார் ஆயரை நாம் உட்பட நான்கு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்தி ஒரு அமைப்பொன்றைகொண்டு வரவேண்டும். அதற்கு அவரை மத்தியஸ்தம் வகிக்கும்படி கேட்டிருந்தோம். அதன் பின்னர் ஆயர் தமிழரசுக்கட்சியுடன் கலந்துரையாடியுள்ளார். அது தொடர்பான விடயங்களை அடுத்த சந்திப்பில் கூறுவார் என எதிர்பார்க்கின்றோம். அதேநேரம் எதிர்வரும் பதினொராம் திகதி மீண்டும் மன்னார் ஆயர் தலைமையில் கட்சிகளுக்கு ஒரு கூட்டம் நடைபெறவுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. உண்மையிலேயே ஆயர் பத்திரிகைகளுக்கு வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அதனை தெளிவாக கூறியுள்ளார். அதனால் நாம் எடுத்துக் கொண்ட விடயங்கள் சம்பந்தமாக பேசப்படமாட்டாது என நான் நினைக்கின்றேன். அதாவது கூட்டமைப்பை பதிவுசெய்வதைத்தாண்டி ஒரு பொதுவேலைத்திட்டத்தின் பிரகாரம் எல்லாக்கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தவேண்டும். அதற்குள் ஐந்து கட்சிகளை மாத்திரமல்ல வேறு கட்சிகளையும் அதற்காக ஆயர் அழைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. ஆகவே எதிர்வரும் சந்திப்பில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என கருதமுடியாது. அதேநேரம் ஆயர் வேறு ஒரு வழியில் கூட்டமைப்பை பெரிதாக அமைக்கவேண்டும் என்பதிலேயே அக்கறைசெலுத்துக்கின்றார் என கருதுகின்றேன்.
கேள்வி:- திம்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் திம்பு திட்ட வரைபுகளை தற்போதுள்ள சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என கருதுகிறீர்கள்?
பதில்:- எமது கட்சி புளொட், விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், தமிழர்விடுதலைக்கூட்டணி என ஆறுகட்சிகளின் பிரதிநிதிகளும் திம்புவிற்கு சென்றிருந்தோம். இந்த ஆறு கட்சிகளில் விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரிலே இயங்கிக்கொண்டிருந்தாகள். அந்த நேரத்தில் அரசியல் அவதானிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை நாம் அனைவரும் வித்தியாசமாக வேறுபாட்டுடனேயே பேசப்போகின்றோம் என கருதினார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்வுகூறல்களையும் எதிர்பார்ப்புக்களையும் முறியடித்து ஆறு கட்சிகளும் ஒரே குரலில் ஒற்றமையாக எமது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். குறிப்பாக ஒவ்வொரு இரவுப்பொழுதிலும் எமக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடங்களில் ஒன்றுகூடி நாளை யார்பேசுவது என்னபேசுவது போன்ற விடயங்களை கலந்துரையாடி தீர்க்கமாக எடுத்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டோம். இந்த ஒற்றுமையானது தமிழினத்திற்கு எதிராக இருந்த பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அவ்வாறான ஒர் ஒற்றுமையான செயற்பாட்டை அதன் பின்னர் நான் இங்கு காணவில்லை. அப்போதைய காலத்தில் ஆயுத இயக்கங்களிடையே பரஸ்பரம் பகைமை உணர்வு கூடுதலாக இருந்த காலமாகும். அந்த நேரத்திலே மிக ஒற்றுமையாக செயற்பட்டமை மிகப்பெரிய விடமாகும்.
நாம் அந்த பேச்சு வார்த்தையின் போது தமிழர் தனித்துவத்தேசிய இனம், தனியானதாயகம், சுயநிர்ணய உரிமை, சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் என நான்கு கொள்கைகளை முன்வைத்திருந்தோம். இவை கொள்கை ரீதியிலான விடயங்கள். இந்தக்கொள்கைகள் என்றுமே செல்லுபடியாகக்கூடிய விடங்கள். அன்றைய காலத்தில் நாம் இந்த கொள்கைகளை முன்வைக்கும் போது அங்கிருந்த தமிழர்விடுதலைக்கூட்டணி உட்பட அனைத்துக்கட்சியினரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட தயாராக இருக்கவில்லை. அதேநேரம் அராசங்கம் 1983 கலவரங்களின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைத்த அதே பிரேரணைகளைத்தான் திம்புவிலும் மாற்றமில்லாது முன்வைத்தார்கள். இவை ஏற்கனவே தமிழர் விடுதலைக்கூட்டணியால் மிகவும் கீழ்நிலையில் இருப்பதாக கூறி மறுக்கப்பட்வை. ஆதனை பார்த்தவுடனேயே இந்தப்பேச்சுவார்த்தையில் எவ்விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணப்பாடு எங்கள் அனைவரிடமும் தோன்றியது. அகவே எங்களுடைய நிலையில் இறுக்கமாக நிற்கவேண்டும் என்ற மனப்பான்மை எமக்குள் உருவானது. தமிழீழக்கோரிக்கை அடிப்படையாக இருப்பினும் அதற்கு மாற்றாக ஒரு நியமான தீர்வை வழங்குவதற்கு அரசு தயாரகவில்லை என்ற காரணம் தான் அப்பேச்சுவார்த்தையும் முறிவுக்குவருவதற்கு நிச்சயமான காரணமாக உள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற படுகொலைகளை வைத்து நாம் வெளியேறியிருந்தாலும் இதுதான் பின்னணியில் காணப்படுகின்றது. இதனை இந்தியாவிற்கு தெளிவாக நாம் விளங்கப்படுத்தியிருந்தோம். சில அதிகாரிகளுக்கு விளங்காது இருப்பது வேறுவிடயம்.
“அரசதரப்பு மிக கீழே இருந்து தான் ஆரம்பிப்பார்கள் அவர்கள் ஒரு படி மேலேசென்றால் நீங்கள் கீழே வாருங்கள் இல்லையேல் வராதீர்கள். அவ்வாறு அவர்கள் மேலே வரும்போது சந்திப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றதா என பார்த்து செயற்படவேண்டும். தெளிவாக இப்பேச்சுவார்த்தையை கையாளவேண்டும்” என கலைஞர் கருணாநிதி கூட இப்பேச்சுவார்த்தைக்கு முன்னதாக என்னை சந்திக்கும் போது கூறியிருந்தார். அதேபோன்று டெல்லியில் பார்த்தசாரதி போன்றவர்களை நேரில் பார்த்து கதைத்திருந்தேன். அந்த கோட்பாடுகள் இன்றும் செல்லுபடியாகக்கூடியவை. ஆகவே அதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை இன்று கொண்டுவர முடியும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இருக்கமுடியாது.
கேள்வி:- நேரடியான பேச்சுவர்த்தைகளின் போது இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு காணப்பட்டது?
பதில்:- முதற்தடவையாக திம்புவில் தான் ஆயுதக்குழுக்களுடான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதற்காக இந்தியா, இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக்குழுக்களுக்கு அழுத்தங்களை வழங்கியிருந்தது. பொதுவாக இந்தப்பேச்சுவார்த்தையை எவ்வாறு எடுத்துச்செல்வது முறிவடையும் நிலை வரும்போது இருதரப்பிடமும் தொடர்ந்து பேசுமாறு கோரிக்கைவிடுதல் போன்ற விடயங்களில் மட்டுமே தலையிட்டார்கள். ஆறுகட்சிகளும் கலந்துரையாடி நான்கு வரைபுகளை முன்வைத்தோம். இலங்கை அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை முறிவுக்கு வர அதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் பிற்காலத்தில் வந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு எங்கள் மீதும் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தே கைச்சாத்திடப்பட்டது. ஓப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னைய நாளில் தான் அந்த வரைபு எமக்களிக்கப்பட்டு அதனை பார்வையிடலாம் மாற்றங்களை செய்யமுடியாது என இந்தியாவால் அழுத்தமாக கூறப்பட்டது. உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் அது தொடர்பிலான விடயங்களை பின்னர் பார்க்கலாம் என ராஜீவ் அரசு கூறியது. அதன் பின்னர் அழுத்தங்களின் மத்தியிலேயே தான் கைச்சாத்திடப்பட்டது.
தற்போது விடுதலைப்புலிகளின் யுத்த தோல்விக்கு பின்னர் நாம் எல்லாவிதத்திலும் பின்னடைந்திருக்கின்றோம் பலவீனமாக இருக்கின்றோம். ஆகவே இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்வதற்கு முதற்படியாக நாம் ஏதாவது செய்துகொள்ளவேண்டும். கிழக்கில் பெரும்பாலும் குடிப்பரம்பல் பாரியமாற்றம் ஏற்பட்டுவிட்டுது. அதே நிலை வடக்கிலும் தற்போது சிறுகச்சிறுக நடைபெற ஆரம்பித்திருக்கின்றது. நாம் 65வருடங்களுக்கு மேலாக பேசிவிட்டோம். ஆனால் எந்தவொரு நியாயமான தீர்வையும் பெறமுடியவில்லை. 1987ஆம் ஆண்டு நியாயமாக இல்லா விட்டாலும் இந்திய இலங்கை ஒப்பந்த தீர்வொன்றே எமது கைகளுக்கு கிடைத்தது. அதன் பிரகாரம் தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அது கூட தற்போது படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் நிறுத்தப்பட்டு மீண்டும் 13பிளஸ் கொண்டுவரப்படவேண்டும். இவைகள் நிறுத்தப்படாவிட்டால் இன்னும் 5-10வருடங்களில் பேசுவதற்கு ஒன்மே இருக்காது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். இதனைக் கூறுவதால் என்னை நம்பிக்கை இழந்தவன் என்று கூட சிலர் நினைப்பார்கள். யதார்த்த ரீதியில் பார்க்கையில் இன்றைய அரசு அவ்வாறான நிகழ்ச்சித்திட்த்திற்கேற்பட வேலைசெய்துகொண்டிருக்கும் உண்மையை பலர் அறிந்திருந்தும் அதனை அறியாதவர்கள் போல நடிக்கப்பார்க்கிறார்கள். இந்த நிலைமையயை இவ்வாறாவது காப்பாற்றுவதற்கு எதாவது உடனே செய்தேயாகவேண்டும்.
கேள்வி:- சட்டத்தரணி சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் ஆகியோரை இந்திய அரசாங்கம் கடத்தியதன் பின்னணி என்னவாக உள்ளது?
பதில்:- உண்மையிலேயே ரெலோஅணிக்காக சத்தியேந்திரா பேச்சுவார்த்தை மேடைக்கு வர காரணமாக இருந்தவர் சந்திரகாசன் செல்வநாயம் என்ற நிலைமை அன்றிருந்தது. அதேநேரம் விடுதலைப்புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம் வருகைதந்திருந்தார். இவர்கள் ஆயுதக்குழுக்கள் மூலம் கடுமையாக செயற்படக்கூடியவர்கள் என அவர்களிடம்(இந்தியஅரசிடம்) அடிப்படை அபிப்பிராயம் காணப்பட்டதன் காரணத்தாலேயே அவர்கள் கடத்தப்பட்டார்கள். திம்பு பேச்சுவார்த்தையில் நாம் உறுதியாக எமது கொள்கைளில் இருப்பதற்கும் அதேநேரம் இறுதியில் பேச்சுவார்த்தையில் இருந்து நாம் வெளியேறுவதற்கும் சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயம் ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் இந்திய அரசாங்கம் கருதினார்கள். அதிகாரிகளுடன் பேசும் போதும் அதையே தான் கூறினார்கள். சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் போன்றவர்கள் கடுமையாக செயற்படபோகின்றார்கள் என கருதியதில் ஒரு உண்மையில்லை. பாலசிங்கத்தை பொறுத்தவரையில் 1977இல் இருந்தே விடுதலைப்புலிகளுடன் மிக நெருக்கமாகபணியாற்றி ஆலோசகராகவே செயற்பட்டுவந்தவர்.
கேள்வி:- புளொட் அமைப்பைபொறுத்தவரையில் ஆரம்பத்திலே லெபனானில் பயிற்சிபெற்று பலம்பொருந்திய அமைப்பாக காணப்பட்டது. பின்னர் அது பலவீமடைந்து சென்றமைமக்கான காரணம் என்னவாக இருக்கின்றது?
பதில்:- முதலாவது காரணமாக காணப்படுவது எங்களுக்கு ஆயுதம் கிடைக்காது விட்டமையே. வெளிநாடு ஒன்றிலிருந்து நாங்களாக முயற்சித்துக்கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியாவின் சென்னை நகரிலிருந்து வெளிக்கொண்டு வர இயலாது போனது. அதனை இந்திய அரசாங்கம் கைப்பற்றியது. இரண்டு அதிபார ஊர்திகளில் நிரப்பபட்ட ஆயுதங்களே அவ்வாறு கைப்பற்றப்பட்டன. அவை எமது கைகளுக்கு கிடைத்திருந்தால் அந்தநேரத்தில் பெரியதொரு ஆரம்பமாக இருந்திருக்கும். புளொட் ஒரு சுதந்திரமாக இயங்கும் இயக்கமாக இருக்குமே தவிர மற்றைய எவரின் சொல்லையும் கேட்டு நடக்காது என அப்போது எங்களுடன் தொடர்பாடலில் இருந்த இந்திய அதிகாரிகள் எம்மீது வைத்த அவநம்பிக்கையும் ஒரு காரணமாகும். அதன் காரணத்தாலேயே பல உதவிகளை மறுத்திருக்கின்றார்கள்.
அடிப்படையாக ஆயுதக்குழுவொன்றுக்கு ஆயுதம் இல்லாது செயற்படுவது என்பது மிக கடினமான விடயம். அதன் காரணமாக வடகிழக்கில் விடுதலைப்புலிகள் எம்மை தடைசெய்யும் போதும் அவர்கள் மற்றைய இயக்கங்களை தாக்கியது போல் எம்மையும் தாக்க முற்படுகின்றபோதும் நாங்கள் எம்மை தற்காத்துக்கொள்ள முடியாத நிலை உருவானது. இதுவே எமது இயக்கம் பலவீனமடைவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்தியாவின் தலையீட்டினால் வங்களாதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கொமாண்டர் பதவியிலிருந்த லோரன்ஸ் லிப்சூல் (Lorenz Lifzultz) என்பவர் எழுதிய நூலின் தமிழாக்கமாகவே ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல்; 1985இல் புளொட்டினால் வெளியிடப்பட்டது. இந்தப்புத்தகத்தின் வெளியீடு இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையயும் புளொட்டின் ஆயுதப்புரோட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. உதவிகளை செய்ய மறுத்தது. ஆகவே இதுவும் எமது கட்சி பலவீனமடைவதற்கு ஒரு காரணமாக உள்ளதென கூறமுடியும்.
கேள்வி:- செப்ரம்பரில் நடைபெறவிருக்கும் வடக்கு மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- இன்றுவரை ஒருசரியான நிலைப்பாட்டிற்கு எமது கட்சி வரவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தேர்தல் தொடர்பில் இருக்ககூடிய சில கருத்துவேறுபாடுகள் அல்லது கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் இந்த நான்கு கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் வேட்பாளர்களை நியமிப்பதில் இருந்த மிகப்பாரிய பிரச்சினைகள் இவற்றினை கருத்தில் கொண்டு இதே நிலைமைதான் வடக்கிலே வந்துவிடுமோ என்ற மனகிலேசம் ஒன்று நான்கு கட்சிகளிடையே இருந்துகொண்டிருக்கின்றது. இதன் காரணத்தால் நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் மிக விரைவில் அதற்கொரு முடிவெடுக்கவுள்ளோம். இன்று அரசு வடமாகாணசபைத்தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. மிகத்தீவிரமாக அந்த நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எந்தவிதமான ஒரு தேர்தல் வேலைகளையும் செய்யவில்லை. அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அபேட்சகர்களை தெரிவுசெய்யவேண்டும். அவர்களை இப்போது முதல் செயற்பட சென்றால் தான் வாக்குகளை சேகரிக்க முடியும். கட்சிகளுக்கிடையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படவேண்டும். ஆனால் அவற்றை கூட தீர்மானிக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு மிகவும் இழுபறியான நிலையில் இருக்கின்றது. இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என நினைக்கின்றேன்.
கேள்வி:- வடக்கில் தற்போது நடைபெறும் குடியேற்றங்களில் உள்ள சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- இன்று முக்கியமாக இருக்கும் முறைப்பாடாக இதுவே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அல்லது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் வந்து குடியேறுவதை எவரும் தடுக்கவும் முடியாது அதனை பிழை என கூறவும்முடியாது அதனை வரவேற்கவேண்டும். அந்த போர்வையில் வெளியில் இருக்க கூடிய அல்லது சம்பந்தமில்லாதவர்ள் குடியேறுவதை நாம் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களை காட்டிலும் சிங்கள மக்கள் முல்லைத்தீவில் அதிகமாக குடியேறுவது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதே நிலைமை முல்லைத்தீவில் நீடித்துக்கொண்ட செல்லுமாகவிருந்தால் 2020,2021 தேர்தல்களில் தமிழ்மக்கள் சிறுபான்மையாக மாறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அதேநேரம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தை அரச சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரித்து அப்பகுதி மக்களுக்கு நட்ட ஈட்டுக்களை வழங்கி அவர்கள் அதனை மறந்து ஓரிரு ஆண்டுகள் கடந்த பின்னர் அங்கு என்ன நடக்கும் யார் குடியேறுவார்கள் என கூறமுடியாத ஆபத்தான நிலை காணப்படுகின்றது. வடக்கில் உறுதிகாணிகளாக காணப்படுவதால் குடியேற்றங்களை செய்யமுடியாது அதனால் தான் அவர்கள் சுவீகரிப்பு நடவடிக்கைமூலம் திட்டமிட்டு கையகப்படுத்த முயற்சிசெய்கிறார்கள்.
கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு நோக்கிய பயணத்தில் இந்தியா எவ்வாறன நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் என கருதுகின்றீhகள்?
பதில்:- தற்போது 70,80 கள் அல்ல. நிலைமைகள் முற்றாக மாறியுள்ளன. ஆகவே ஒரு எல்லைக்கு மேல் தங்களால் அழுத்தங்களை வழங்க முடியாது என அவர்களுடன் பேசும்போது கூறுகின்றார்கள். இருப்பினும் நாங்கள் அழுத்தத்தை வழங்குவோம் நீங்கள் அரசுடன் பேசித்தீர்வைக்காணுமாறு பகீரங்கமாக கூறுகின்றார்கள். இந்தியாவின் அழுத்தங்கள் உதவிகள் முக்கியமாக தமிழ் நாட்டு மக்களின் அழுத்தங்கள் ஒன்று இல்லாது இங்கு தீர்வு ஒன்று வரமுடியாத நிலைமையை இலங்கை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் மிக இலகுவாக பேசித்தீர்த்துவைக்ககூடிய பிரச்சினையை இன்று சர்வதேசமயமாவதற்கு அரசாங்கமே காணரமாக இருக்கின்றது. இதற்கு நாங்கள் காரணமல்ல. கடந்தகாலங்களில் தொடர்ந்து வந்து பெரும்பான்மை அரசாங்கங்கள் தாங்கள் ஒரு நியாயமான தீர்வை வைப்போம் அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை அதனால் முன்வைக்க முடியாதுள்ளது என தொடர்ச்சியாக கூறிவந்தன. இதனை இந்திய உட்பட வெளிநாட்டவர்கள் நம்பி யுத்தம் முடிந்தவுடன் தீர்வு வந்துவிடும் என கருதினார்கள். ஆனால் தீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை என்பதை இந்தியா உட்பட பல வெளிநாட்டவர்கள் உணரத்தொடங்கியுள்ளார்கள். ஆகவே தான் அவர்கள் அமெரிக்க பிரேரணைகள் ஐ.நா தீர்மானங்கள் போன்ற அழுத்தங்கள் மூலமே அதனை செய்யமுடியும் என கருதுகின்றார்கள். அதனைத்தான் நாங்களும் நம்பியிருக்கின்றோம். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றத்திலும் , வெளியிலும் இந்தியாவும் அமெரிக்காவும் தான் எமக்கு ஒரு தீர்வைத்தரவேண்டும் நாங்கள் வெளிநாட்டைத்தான் நம்பியிருக்கின்றோம் என கூறியுள்ளார்கள். ஆகவே அவ்வாறான அழுத்தங்கள் தான் எதாவது ஒரு தீர்வைபெற்றுக்கொடுக்க முடியும். (12.05.2013)

Dharmalingam Siththarthan, the Leader of the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), a former militant who embraced democratic politics consequent to the signing of the Indo-Lanka Accord told the Daily Mirror that the Provincial Council system introduced under the Accord should not be weakened despite it being inadequate in addressing the aspirations of Tamil people. During the war PLOTE was an organisation that was opposed to the LTTE. After the end of the war, the PLOTE, however, teamed up with the Tamil National Alliance (TNA).

Kelum & YohanBy Kelum Bandara and Yohan Perera

Q:Yours is a political party that was opposed to the Liberation Tigers of Tamil Eelam(LTTE). But, how do you see the political developments after the elimination of the LTTE?
Well, rather than being opposed to the LTTE, the LTTE were opposed to us. After 1987 Indo-Lanka Accord, we believed that a solution could be found within a united Sri Lanka. We realised that India would never allow a separate state in Sri Lanka. We thought an armed struggle for a separate state was a self-destructive exercise. That is the reason that compelled us to opt for a solution within a united Sri Lanka.   Yet, the LTTE never gave up its separatist agenda. Any party or individual opposing the LTTE ideology was seen as their enemies.  We had no choice. We had to defend ourselves.  In that process the only attacks were from the LTTE.
During Thimpu talks, we advocated the Swiss canton system as an alternative to Sri Lanka’s problem. At that time the government of Sri Lanka did not care for it.

Q:Are you elated about the elimination of the LTTE?
Rather than being happy, when the war was over, a large number of Tamils saw a sea of relief. We were told by the successive governments that the LTTE was the stumbling block for the resolution to the national question. They said they could give a reasonable solution once the LTTE was no longer a factor. People really believed that they could live with equity and dignity.  Unfortunately, though the war was over, nothing is happening. In the minds of Tamil people, a fear psychosis is being built. They feel that there is no light at the end of the tunnel. They feel uncomfortable now. I know there is a lot of development work being done. Roads have been reconstructed.  I do not say this can compensate the destruction caused.  There is a need for housing. There are a large number of woman-headed families. They live below the poverty line.  Their suffering has to be alleviated. People should be empowered to stand on their own feet.  The political process and development process should be parallel.

” I was given a copy of the draft document. We asked whether we could make some changes. They said no. They stressed that it was the final document.   In drafting it, we did not have any say “

 Unfortunately, the government thinks development alone would satisfy people, especially the Tamil people. We started this struggle for our political rights, not for development rights. On the political front, we are actually going backwards.  The only solution presently available in the Constitution was the 13thAmendment. Even that is being diluted gradually.  We got the 13th Amendment after a great deal of sacrifices. That is also now being taken away. It is very serious.  Now, they are planning to remove the barriers being faced by the Centre in legislating on subjects devolved to   the provinces.
Also, the 13th Amendment is a result of the agreement between two countries – Sri Lanka and India. Therefore, it can create problems in the international arena as well.

Q:Now, you have joined the Tamil National Alliance (TNA). Can you achieve your target by joining the TNA?
We joined the TNA because a large number of Tamils wanted us to do so. They wanted us to join the TNA and fight for our political rights. They wanted us to remain united.    Also, certain actions by the government also drove us in that direction.  Land grabbing and the excessive presence of the military in the north and their interference in civilians’   activities were some of those actions. Even for a school, function military participation is to be sought.

Q:If the present situation remains, would it strengthen the separatist ideology and lead to the resurgence of Tamil militancy?
Definitely, in my opinion, an armed struggle will not take place in the near future. There is no doubt or illusion about it.   People have suffered enough at the hands of militancy. They have suffered losses to both lives and property. Against such a backdrop, I do not see preparations for an armed rebellion. If there is a reasonable political solution, they would not be in any struggle. Maybe, there would be struggles against the rising cost of living or electricity tariff hikes. It is happening in the south.

Q:Still, some sections of the Tamil society believe in a separate state?
Some persons may have such individual opinions. Why do they think like that?  It is because of the attitudes by the successive governments. In my view, if the Sinhala Only Act was not introduced, this problem would have never arisen. The late Prime Minister S.W.R. D. Bandaranaike did away with the Bandaranaike-Chelvanayagam Pact.  For political expediency, they did these things.  When the United National Party (UNP) tried to resolve the problem the Sri Lanka Freedom Party (SLFP) opposed them.  Likewise, the SLFP attempts to resolve the problem were opposed by the UNP.  There were armed groups fighting for a separate state.  Except for the LTTE, all the others joined the democratic stream later. But, nothing has been done to address the Tamil national question. In 1976, the Tamil United Liberation Front (TULF), in its Vadukkodai resolution, asked for a separate state. Yet, in 1980, the party was ready to accept the   District Development Councils as an alternative.  Since 1987, nothing has been done.

Q:Some political parties in the south believe the Constitution of the Northern Provincial Council will be used as the basis for secession. How do you respond to that?
It is a misconception. When we started our armed struggle for a separate state, we did not have the Provincial Council system in place.  Whether there is a Provincial Council or not, it would not change our attitude. Only the attitude of the government and the way they treat us could change this. If they could convince us that we could live together with equal rights and dignity, no Tamil would demand a separate state. Now the political climate for a separate state no longer exists.  There may be some persons raising voices in isolation here and there. Some expatriate Tamils may try to make a political issue out of it. The successive governments are only responsible for the advent of the Tamil militancy. Every peaceful agitation for rights was suppressed by the armed might of successive governments. Innocent young girls and boys   were killed and thrown on the street. Then only did they resort to armed struggle as the means to counter oppression by the governments. 

Q:The 13th Amendment was a hastily prepared piece of document. Isn’t it flawed as a result?  
That is true. Not only the 13th Amendment but the Indo-Lanka accord was also like that. Had our leader been alive, he would have stated it. This does not meet the aspirations of the Tamil people. Yet, we accepted it. We thought we could slowly build on it further.  We have to alleviate the mistrust and misunderstanding between the Sinhalese and Tamils. Then, the problem can be solved.  Ordinary persons in both the communities have better relations. Buddhism and Hinduism have similarities. There were a lot of Tamil Buddhists. Tamils visit Buddhist temples and Sinhalese Hindu temples.

Q:What are the loopholes you have identified in the 13th Amendment?
In a sense, it was introduced under the unitary Constitution. Under the unitary Constitution, they can take away subjects allocated to the Provinces. They have done so. The Divineguma Act is one such example.  The Centre interfering with the Provinces is the main problem.  Also, the concurrent list should be done away with.

Q:It means you are asking for more powers such as finance and taxation devolved to the provinces?
Without financial devolution, how can a Provincial Council run?   Today, the Provincial Councils can do nothing. There should be specific amounts set aside for provincial developments. Financial devolution should be there.

Q:You belonged to a military group that joined the democratic stream after the 1987 Indo-Lanka Accord. What is your personal experience on the introduction of it at that time?
We had the North-East Provincial Council in operation only for one year-from 1988 to 1989. Then, we had the Eastern Provincial Councils in operation.

” Without financial devolution, how can a Provincial Council run?   Today, the Provincial Councils can do nothing. There should be specific amounts set aside for provincial developments “

Q:In the run-up to the signing of the 1987 Indo-Lanka agreement, what role did you play as a militant?
Well, it was the first time that a militant group like ours was invited for direct talks with the government of Sri Lanka. Before that we had talks with the government during the Thimpu talks. Actually, the government of Sri Lanka held talks with the government of India on the 13th Amendment and the Indo-Lanka Accord. We were invited to show the document they prepared.

Q:You had an interaction with Indian leaders?
On the eve of signing the agreement on July 29, 1987, I, representing PLOTE, went to India on July 26. Before the late Indian Prime Minister Rajiv Gandhi left for Sri Lanka to sign the agreement, we were called in and the document was shown to us. The LTTE was shown it separately.  They kept us separate from the LTTE. The TULF was also shown it separately. I was given a copy of the draft document. We asked whether we could make some changes. They said no. They stressed that it was the final document.   In drafting it, we did not have any say.  We were told what was going to be there to a certain extent. They consulted the TULF leaders on the draft. Whatever was told to them had not been included in the final draft signed here. I was told about it by the late TULF leader Amirthalingam.  Consequent to the Indo-Lanka Accord, the North-Eastern    Provincial Council was conducted.  We, the PLOTE, opted out over such differences.

” Unfortunately, though the war was over, nothing is happening. In the minds of Tamil people, a fear psychosis is being built. They feel that there is no light at the end of the tunnel. They feel uncomfortable now “

Q: You were once with the LTTE. Is it true that you convinced late LTTE ideologue Anton Balasingham to join the organization?
Yes, he was in London at that time. I, along with another, encouraged him to join   the organization. After that only, we split from the organization.

Q:What was the reason for your leader Mr. Uma Maheswaran to break ranks with the LTTE along with you?
More than anything else   , it was a personality problem.  Prabakharan was never ready to listen to anyone. He wanted to be the person with the highest. But, Uma Maheswaran was the chairman of the organization at that time.  The personality issue led to a split. I sided with my leader at that time, and Anton Balasingham with Prabhakaran.  There were also some other reasons that led to it.

Q:When did your organization PLOTE hand over weapons after joining the democratic stream?
We did it twice- one in Batticaloa after signing the Indo-Lanka Accord. Then, we did it in 2002 after the then government United National Party (UNP) signed a peace deal with the LTTE.

Q:Also, there are talks about infighting in the TNA. How do you see it?
There is a long standing demand for the registration of the TNA as a registered political party. It has not been done until now. Four parties of the TNA were demanding it for a long time. But, nothing is being done . That is the problem between Ilankai Tamil ArachuKachchi (ITAK) and the other parties within the TNA. The ITAK want to be the commanding party of the TNA. That is the case.

http://www.dailymirror.lk/opinion/172-opinion/31684-mistrust-and-misunderstanding-between-sinhalese-and-tamils-must-end.html

257 Comments

  1. erectile dysfunction treatment https://challonge.com/afersparun

    Thank you, Valuable stuff!

  2. Viagra 5mg prix https://wallsawadar.zombeek.cz/

    You actually expressed this really well.

  3. canadian pharmacies online prescriptions https://canadianpharmaceuticalsonline.doorblog.jp/archives/19385382.html

    Information well applied..

  4. most reliable canadian pharmacies https://canadianpharmaceuticalsonline.publog.jp/archives/16846649.html

    Many thanks. Ample information.

  5. Viagra uk https://gravatar.com/kqwsh

    You actually suggested that exceptionally well!

  6. canadian pharmaceuticals https://www.buymeacoffee.com/pharmaceuticals

    Whoa lots of amazing knowledge!

  7. legitimate canadian mail order pharmacies https://telegra.ph/Canadian-pharmacy-drugs-online-12-11

    Many thanks! A good amount of tips!

  8. online pharmacy https://canadianonlinepharmacieslegitimate.flazio.com/

    Really quite a lot of fantastic facts!

  9. canadian pharmacy world https://halttancentnin.livejournal.com/301.html

    Regards. Fantastic information.

  10. top rated online canadian pharmacies https://linktr.ee/canadianpharmaceuticalsonlineu

    Regards! Plenty of knowledge!

  11. top rated online canadian pharmacies https://wakelet.com/@OnlinepharmacyCanadausa

    You’ve made your point.

  12. madridbet says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://zaz.psouutomaszow.pl/tips-on-finding-the-best-paper-writing-services/

  13. Meritking says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://www.finzolimburg.nl/uncategorized/hello-world/

  14. kahve oyun says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    http://www.ashraegoldcoast.com/slide-2/

  15. okey oyna says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    http://preces.us/2016/12/01/20161201/

  16. canadian pharmacies online prescriptions https://dailygram.com/blog/1183360/canada-online-pharmacies/

    You explained it very well!

  17. canada drug says:

    canadian pharmacy no prescription https://www.mixcloud.com/canadianpharmaceuticalsonline/

    Incredible many of very good information.

  18. buy viagra 25mg https://www.bakespace.com/members/profile/Viagra generic online Pharmacy/1562809/

    Truly many of valuable info.

  19. canadian pharmacies mail order https://fnote.net/notes/7ce1ce

    Really a good deal of wonderful tips.

  20. Viagra 5 mg funziona https://www.dibiz.com/gdooc

    Appreciate it, An abundance of information!

  21. canadian government approved pharmacies http://climbingcoaches.co.uk/member-home/londondrugscanada/profile/

    You stated that perfectly.

  22. canadian pharmacy cialis https://www.buymeacoffee.com/pharmacies

    You said it perfectly.!

  23. safe canadian online pharmacies https://www.brit.co/u/canadian-online-pharmaciesprescription-drugs

    Wow all kinds of superb advice!

  24. Google says:

    Google

    […]Sites of interest we have a link to[…]

  25. meritking says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://northpointcounseling.org/2017/12/03/why-keep-falling-in-love-with-the-wrong-person/

  26. canadian online pharmacy https://500px.com/p/arrameru/?view=groups

    Terrific information, Thank you!

  27. Viagra alternative https://challonge.com/gyoupafefer

    You’ve made your stand quite clearly.!

  28. Viagra 20 mg best price https://hafbeltminla.zombeek.cz/

    Whoa many of awesome facts!

  29. canadian pharmacies shipping to usa https://pastelink.net/ii18z6qf

    Regards! Quite a lot of forum posts.

  30. Canadian Pharmacies Shipping to USA http://trommelforum.ch/forum/profile/franbervage/

    Valuable facts. Cheers.

  31. canada pharmacies online prescriptions https://nicol.co.tz/community/profile/canadianpharmacy/

    You said it nicely..

  32. canadian pharmacies shipping to usa https://chanchuoi.com/community/profile/canadianpharmacy/

    Thanks, Plenty of information.

  33. fuck google says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://qantumgroup.com.au/15-best-blogs-to-follow-about-real-estate/

  34. fuck says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://fotografie-kiel.de/?p=193

  35. porn says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    http://www.daftar-slotuangasli.info/judi-slot-uang-asli/

  36. denemetitles

    denemeexpart

  37. can you buy sildenafil online

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  38. buy sildenafil india online

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  39. sildenafil price comparison uk

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  40. 100mg sildenafil no rx

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  41. phrguru.com says:

    Clozaril

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  42. buy online viagra tablets in india

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  43. buy cialis overnight delivery

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  44. cheaper alternative to cialis

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  45. genuine viagra tablets

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  46. tadalafil raw dissovable

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  47. tadalafil from nootropic review

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  48. purchase viagra australia

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  49. essay writer services

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  50. essay writing service discount code

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  51. premium essay writing service

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  52. custom essay writing canada

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  53. personal essay writing service

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  54. college essay editing services

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  55. admission essay editing service

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  56. custom essay cheap

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  57. essay introduction help

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  58. scholarship essay writing service

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  59. top custom essay services

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  60. persuasive essay help

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  61. essay writing service discount code

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  62. write my essay reviews

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  63. help with writing essays at university

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  64. provigil international pharmacy

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  65. Elavil

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  66. india pharmacy valium

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  67. phrinus.com says:

    unicare pharmacy artane

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  68. online pharmacy oxycodone prescription

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  69. cialis side effects

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  70. cost of viagra prescription

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  71. tadalike.com says:

    tadalafil tablets 40mg

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  72. sildenafil vs tadalafil vs vardenafil

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  73. female viagra pill for sale

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  74. coupon for cialis

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  75. over the counter drug that works like cialis

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  76. valtrex mexico pharmacy

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  77. pharmzip.com says:

    hungary pharmacy codeine

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  78. can i order viagra from canada

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  79. cialis on line

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  80. buy cialis pay with paypal canada

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  81. viagra canada purchase

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  82. pharmacy famotidine

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  83. buy cialis united states

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  84. viagra tablet 25 mg price

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  85. Transsexual in Perumpavur

    blog topic

  86. buy generic viagra soft tabs

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  87. viagra pills online purchase

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  88. cheap generic viagra for sale

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  89. sildenafil 20 mg tablet cost

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  90. pharmacy price comparison viagra

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  91. buy cialis canadian

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  92. tadalafil india online

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  93. cheap cialis online overnight shipping

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  94. emf meter for sale

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  95. how long does it take for tadalafil to work

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  96. flagyl surveillance

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  97. bactrim g6pd

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  98. gabapentin menstruation

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  99. valtrex constipation

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  100. lyrica anderson marriage boot camp

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  101. tamoxifen urticaria

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  102. lisinopril storage

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  103. furosemide ventoso

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  104. glucophage eureka

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  105. semaglutide rybelsus 7 mg tablet

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  106. semaglutide 1.7 mg

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  107. rybelsus rx

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  108. what cold medicine can i take with cymbalta

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  109. escitaloprám oxalate vs escitalopram

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  110. drugs.com duloxetine

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  111. para que sirve el cephalexin

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  112. difference between azithromycin and azithromycin

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  113. keflex for ingrown toenail

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  114. how long does it take for lexapro to work for anxiety

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  115. lamotrigine and fluoxetine

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  116. gabapentin nervesmerter

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  117. how long does amoxicillin last

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  118. zoloft dosage 100mg

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  119. metronidazole consultation

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  120. cheap viagra 100mg canada

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  121. spiraldynamics

    spiraldynamics

  122. child porn says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://wishestv.com/page/11/

  123. porn says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://clarinbridgemontessori.ie/2018/03/22/clarinbridge-camogie-club-duck-racing/

  124. Spiral Dynamics

    Spiral Dynamics

  125. ic ciprofloxacin hcl

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  126. cephalexin vs macrobid

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  127. bactrim side effects rash

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  128. bactrim oral dose for uti

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ச…

  129. vxi.su says:

    vxi.su

    vxi.su

  130. porno izle says:

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் à…

    https://www.mayaross.com/the-dukes-last-governess-get-extended-epilogue/

Leave a Reply