அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார். குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் மரணித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த மாணவிக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து தொடர்பான விபரங்கள் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதுடைய மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.