ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) இனது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய நிலையில், கூட்டமைப்பின் மீதிக் கட்சிகளாக இருந்த புளொட், ரெலோ ஆகிய அமைப்புகள், கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) எனும் பெயரில் குத்துவிளக்கை பொதுச் சின்னமாகக் கொண்டு பயணிக்கத் தொடங்கி ஓராண்டுகள் கடந்து விட்ட நிலையில், கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழர் தாயகமான திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய தமிழ்ப் பொது மகன் தியாகி நடராஜனுக்கு (வயது 22) எமது வீர அஞ்சலிகள்.
04.02.1988 இல் வவுனியா முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் ராமர் (ஜெயா), ஞானம் (விஜயேந்திரன்), ரவி ராஜன், ஜீவராஜா, செல்டன்(ரெலா), ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண் கைதிகள் 729 பேருக்கும் 25 பெண் கைதிகளுக்கும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், யாழ்.சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகளும் மட்டக்களப்பு சிறையிலிருந்து 27 கைதிகளும் இன்று(04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
76 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் நேற்று நாட்டிற்கு வருகை தந்தார். தாய்லாந்து பிரதமரின் இலங்கை வருகையை முன்னிட்டு இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 3 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.