தோழர் சிவபாலன் (UK) அவர்களது பேரன் செல்வன் அயன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கு இன்று விசேட உணவு வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கலைஞர் தவராஜா, கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டார இணைப்பாளர் சஞ்ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் மற்றும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அவர்கள் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுர குமார திசாநாயக்கவுடன், கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் அனில் ஜயந்த ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மோதலில் ஈடுபட்ட 34 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகளுக்கு இடையில் பல தடவைகள் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) இனது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய நிலையில், கூட்டமைப்பின் மீதிக் கட்சிகளாக இருந்த புளொட், ரெலோ ஆகிய அமைப்புகள், கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) எனும் பெயரில் குத்துவிளக்கை பொதுச் சின்னமாகக் கொண்டு பயணிக்கத் தொடங்கி ஓராண்டுகள் கடந்து விட்ட நிலையில், கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழர் தாயகமான திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய தமிழ்ப் பொது மகன் தியாகி நடராஜனுக்கு (வயது 22) எமது வீர அஞ்சலிகள்.
04.02.1988 இல் வவுனியா முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் ராமர் (ஜெயா), ஞானம் (விஜயேந்திரன்), ரவி ராஜன், ஜீவராஜா, செல்டன்(ரெலா), ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண் கைதிகள் 729 பேருக்கும் 25 பெண் கைதிகளுக்கும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், யாழ்.சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகளும் மட்டக்களப்பு சிறையிலிருந்து 27 கைதிகளும் இன்று(04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
76 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் நேற்று நாட்டிற்கு வருகை தந்தார். தாய்லாந்து பிரதமரின் இலங்கை வருகையை முன்னிட்டு இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 3 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
03.02.1985இல் சென்னையில் மரணித்த தோழர் குஞ்சி (பிரான்ஸிஸ் – புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.