போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நீதிமன்றில் இன்று முற்பகல் முன்னிலையாகியிருந்தார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் டயனா கமகேவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றில் நேற்று முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் குற்றவியல் வழக்கு ஏற்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.