இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ப்ரான்கோயிஸ் பெக்டெட் (Jean-François Pactet) இன்று திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். 53 வயதான அவர் இன்று காலை ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் சுவிஸ் உறுப்பினர் வி.இரத்தினகுமார் அவர்களின் நிதி உதவியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் நான்காவது செயற்பாடாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கு மரண வீடுகளுக்கு இலவசமாக வழங்குவதற்கான கூடாரம் அமைப்பதற்கான ஒரு தொகுதி நிதியுதவியாக 31,000/- ரூபாய் வழங்கப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 45இ509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் இதுவரையில் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் 12 வீடுகள் முற்றாகவும் 3,166 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கும் தகைமை அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சி.வி விக்னேஸ்வரனை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள தமது இல்லத்தில் தம்மை சந்திக்க வந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல் நீதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய தாழமுக்கம் தற்சமயம் சூறாவளியாக விரிவடைந்துள்ளது. றீமால் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி வடக்கு திசையாக பயணித்து இன்று நள்ளிரவு பங்களாதேஷ் மற்றும் அதனை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடா கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.