18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
		    
பாராளுமன்ற நுழைவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். விரைவாக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேவேளை, அரச சேவை ஓய்வுபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பும் இன்று பத்தரமுல்லையில் எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.  
மன்னார் – விடத்தல்தீவில் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திற்கு 6 மாத சேவை நீடிப்பிற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் இன்று  ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk  தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பாலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. இன்று ஆரம்பமாகும் 56 ஆவது கூட்டத்தொடர் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளது. 
தொலைத்தொடர்புகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புடன் இணங்கவில்லை என உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என சபாநாயகர் பாராளுமன்றுக்கு அறிவித்தார்.