திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற காணி உரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோட்டையை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாரிய பணிகள் இங்கு செயற்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதார மையமாக மாற்ற முடியும்.
கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது.
அதற்கேற்ப புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.