முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு  மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தெமட்டகொடையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரிந்த அமில பிரியங்க அமரசிங்க எனும் இளைஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பிரத்தியேக பாதுகாவலர்களுக்கு சொந்தமான டிபென்டரை பயன்படுத்தி கடத்திச் சென்று தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாவலர்கள் 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதிவாதிகள் 8 பேரும் ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால், அவர்களுக்கு எதிராக நட்டஈடு மற்றும் அபராதத்தை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.
இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றவாளியாக காணப்பட்ட நிலையில், அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.