ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் திருப்தியடையும் பட்சத்தில், அவற்றை முன்நோக்கி கொண்டுசெல்ல முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இல்லையாயின், மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டில் மருந்து, உரம் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுடன் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் நிற்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும் இதுவரையில் அதற்கான உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு தீர்வாக பல பரிந்துரைகள் கல்வி அமைச்சின் குழுவொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் திரு. த.சித்தார்த்தன் அவர்களின் கந்தரோடை இல்லத்தில் நடைபெற்றது.
யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லாரியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ செயற்படுவதைத் தடுத்து விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜேதாச ராஜபக்ஸ கட்சியின் உறுப்பினராக செயற்படுவதற்கும் இந்த இடைக்கால தடையுத்தரவில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் பணியாற்றுவதற்காக தொடர்ந்தும் இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதை இடைநிறுத்துவதற்கு அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சர்ஜி லெவ்ரோவ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இடம்பெறும் பிரிக்ஸ் அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ரஷ்யாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.