20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற காணி உரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
25 சதவீத மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் 1இ800 மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்படுவதற்கு முன்னர் 200 மருத்துவர்களே வெளிநாடுகளுக்கு இடம்பெயரவிருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களில் காணப்பட்டன. எனினும் தற்போது 25 சதவீதமான மருத்துவர்கள் வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கான தேர்வுகளில் சித்தியடைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாக்கிரக போராட்டம் 13வது நாளாக இன்றும் தொடர்கின்றது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே அவர்கள் இவ்வாறு தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “நாம் 200” தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மலையக இளைஞர் மாநாடு நடத்தப்படவுள்ளது. கண்டியில் மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சரவை போச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். பெருந்தோட்டங்களில் வாழும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாற்பது வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த சங்கம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 24 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.
உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை Oneline ஊடாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குள் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திறன்பேசி செயலிக்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 திகதி வரை குறித்த நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.