தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 35ஆவது நினைவு தினம் இன்று காலை (13.07.2024) வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்தூவி அஞ்சலி செலுத்தல் என்பன இடம்பெற்று நினைவுரையும் ஆற்றப்பட்டது.
மேற்படி அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் நாவலியூர் கௌரிகாந்தன், முன்னாள் வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.