சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உடனடியாக பதவி விலகியதை அடுத்து அந்த சங்கத்தின் பதில் தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன கடந்த 13 ஆம் திகதி பதவி விலகினார். ஜப்பான் ஜய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆலோசனை சேவை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. X பதிவின் ஊடாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்( Julie Chung) இதனை கூறியுள்ளார். சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 22 பேரும், சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 கண்காணிப்பாளர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், தங்களது அழைப்பின் பேரில் அயல் நாடுகளைச் சேர்ந்த 7 கண்காணிப்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றுமாலை இடம்பெற்றது. 
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். அடுத்த ஆண்டில் ஜனவரி 02 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை விடுவிக்க வேண்டியிருப்பதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
14.09.2014இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ராமையா (செல்லத்துரை தங்கராசா) அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளையுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.