இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது. தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,954 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாகக் கடந்த ஜூலை மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,652 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
தெஹிவளை நெதிமால மைதானத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 05 நாட்களுக்குள் தெஹிவளை மற்றும் சன நடமாட்டம் மிக்க பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் ஐவர் பலியாகியுள்ளனர். தெஹிவளை கடவத்த வீதியில் இன்று காலை 8 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனுர கொஸ்தா எனும் 45 வயதான ஒருவர் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 அரச அதிகாரிகளுக்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம். அவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி சுமணசேகர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரத்தின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நிதி சார் உதவியை வழங்குவதற்கான புலமைப்பரிசில் பரீட்சை தற்போது போட்டிமிக்க பரீட்சையாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முடிவு மக்களின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் நிதியமைச்சர் நிதியமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
நாளைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வாக்களிப்பு அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகமும் பழைய ஆசனத்திற்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.