அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிக் கடந்த 6 நாட்களாகக் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன்படி இன்று ஏழாவது நாளாக யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேநேரம் இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நாளைய தினம் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முந்தைய அரசாங்கங்களைப் போன்று தற்போதைய அரசாங்கமும் அரசியல் கைதிகள் விடயத்தில் பழிவாங்கும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.