தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொடருந்து திணைக்களம் அளித்த முறைபாட்டை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறுகிய காலத்தில் இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு உண்மைகள் தெரிவிக்கப்படும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.