20.01.2025 திங்கட்கிழமை கனடா மொன்றியலில் காலமான தோழர் மணியம் (மாசிலாமணி சின்னையா – பொன்னம்பலம்) Founder – Auto Plus Nirmala) அவர்களின் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு மலர் வளையமிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
இலங்கை விமானப்படையின் 20ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம்(29) முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரவுள்ளது. விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் பாதீட்டில் அரச பணியாளர்களுக்கு வேதன மற்றும் இதர நலன்புரி கொடுப்பனவுகள் அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிப்படும்.
எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தயாராகியுள்ளது. சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக நினைவுகூர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஸ கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான யோஷித ராஜபக்ஸ இன்று(27) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 500 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து நேற்று முன்தினம்(25) யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டார்.