சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சில பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி என்பன முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மட்டக்களப்புஇ அம்பாறைஇ திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே, சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.