வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும்.
பின்னர், கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் மூன்றரை நாட்கள், அதாவது 17 ஆம் நாள் நண்பகல் வரை மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான நாளாக ஒதுக்கப்படும்.
இந்த மூன்றரை நாட்களில் ஒருநாளேனும் அரச விடுமுறை அல்லாத வாரமொன்றில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எவ்வாறாயினும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னரே உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.