அரகலய போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக நட்டஈடு பெற்றுக் கொண்ட மேலும் பலரின் பெயர்களையும் நட்டஈட்டுத் தொகை தொடர்பிலும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, கெஸ்பெவ நகர முதல்வர் லக்ஷ்மன் பெரேரா 696 இலட்சம் ரூபாய் நட்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ 73,044,000 ரூபாயும், அவரது மகனான ரமேஷ் சானக பெர்ணான்டோ 1,888,300 ரூபாயையும் நட்டஈடாக பெற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இலக்கம் 246, இசுருபுர, சுதந்திர மாவத்தை, டப்ளியு.எம்.ஞானவதி 280 இலட்சம் ரூபாயும் நட்டஈடாக பெற்றுக் கொண்டுள்ளதா அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
14 ஆணைக்குழுக்களை நியமித்து ஆணைக்குழுக்களுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த 14 ஆணைக்குழுக்களும் வழங்கிய அறிக்கையின் நட்டஈடுகளுக்காகவே இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் 1221 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு 1125 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தான் ஆணைக்குழுவை நியமித்துச் செலவு செய்துள்ளார்கள். இறுதியில் அதை மட்டும் தான் செய்துள்ளார்கள்.
இந்த நாட்டு மக்களுக்கு முக்கியமாகவுள்ள ஈஸ்டர் தாக்குதல், அரச நிதியை மோசடி செய்தமை ஆகிய விடயங்களுக்காகச் செலவிடப்படவில்லை.
அந்த ஆணைக்குழுக்கள் எதற்காக நியமிக்கப்பட்டுள்ளன? அந்த சந்தர்ப்பத்தில் எழுந்த அரசியல் போராட்டத்தை மூடி மறைக்கவே தவிர வேறு எந்த தேவைக்காகவும் இல்லை.
அதற்கும் 5000 இலட்சத்திற்கும் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.