செங்கலடி பகுதியில் மலசலக்கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒருமாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதாரப் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றில் மலசலக்கூடத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள உணவகங்களை நேற்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது ஒரு உணவகத்தில் மலசலக்கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்ததைக் கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை ஒரு மாதகால சிறைத்தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் கொள்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.