சுற்றுலா விசாவில் இலங்கையில் தொழிலில் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவ்வாறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை கைது செய்வதற்கான முயற்சியின் போது, அவர்களுக்கு சொத்துகளை வாடகைக்கு வழங்கியிருந்த உள்ளூர் பிரஜைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் சட்டம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பை பொதுமக்களும் கொண்டிருக்க வேண்டும்.

அந்நியச் செலாவணி நெருக்கடிக்குப் பிறகு யுக்ரேனிய, ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய நாட்டினர் சுற்றுலா விசாவில் வந்து இலங்கையின் கடலோர நகரங்களில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து சுற்றுலா தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டவர்களில் சுற்றுலா விசாவை புதுப்பித்துத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் உள்ளூர் சொத்துக்களைக் குத்தகைக்கு அமர்த்தி வணிகத்தில் ஈடுபவர்களும் உள்ளனர்.

இவற்றை நாட்டின் வருவாய் ஈட்டலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளாக அரசாங்கம் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தொழிலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய வணிக செயற்பாடுகள் உள்ளூர் நிறுவனங்களிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சில சுற்றுலாப் பயணிகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் செயல்பட்டு வருவதாகவும், விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்ததென பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.