ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்ளையும், இரு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை சட்டமா அதிபருக்குச் சமர்ப்பித்திருந்தது.

சட்டமா அதிபரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்படிஇ சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது,

அவர்களிடம் இருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை மீண்டும் அவர்களுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரினார்.

குறித்த பொருட்களை சந்தேகநபர்களிடமே மீண்டும் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.