திருகோணமலை – குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் கடற்படை பேச்சாளரைத் தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சில தரப்பினரைக் கைது செய்து, கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின் பிடியிலிருந்து தமது படகை விடுவித்துத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் இன்று(04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. Airbus A330 – 200 விமானம் பிரான்ஸின் பாரிஸிலிருந்து இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்தது. இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை துறைமுக நகரத்தின் தெற்கு முனையத்திருந்து மொறட்டுவை வரையிலான கடற்பரப்பின் மேல் இந்த விமானம் 1500 அடி உயரத்தில் பறந்தது.
திடீர் நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்ட சுமார் 60 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையினால் குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குறித்த மாணவர்களின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட, ஆரம்பப் பிரிவு மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி உயர்வு மற்றும் இணை சுகாதார பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை காலை 8 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். அதன்படி, கலந்துரையாடலின்றி வேலைநிறுத்தத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, துப்பாக்கிதாரி என கூறப்படும் சமிந்து தில்ஷான் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்தார். செம்மணி, சிந்துபாத்தி மயானத்திலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மதுபானச் சட்டத்தை மீறி நிதியமைச்சர் என்ற வகையில் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த அனுமதியை வழங்கியது.