இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி – சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். புதைகுழிகளைப் பார்வையிட சென்ற ஐ. நா உயர்ஸ்தானிகர், அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் “அணையா தீபம்” போராட்டத்திற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் சென்றவேளை, அங்கிருந்த போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா தீபம்” போராட்டம், இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு சிறப்பு தர அத்தியட்சகர்கள், ஒரு சிறைச்சாலை அத்தியட்சகர், 8 உதவி அத்தியட்சகர்கள், மற்றும் 5 சிறைச்சாலை பதில் அத்தியட்சகர்கள் , ஆகியோருக்கு இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வகையான இரத்தம் ஒன்று இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘Gwada negative’ என்று அழைக்கப்படும் புதிய இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 48ஆம் இரத்த வகை அது என்று நம்பப்படுகிறது.
இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள், காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக வாழ்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை, ஈரான் தூக்கிலிட்டதாக ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்குள் சட்விரோதமாக ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மித்தெனிய தோரகொலயாய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 25 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.