யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு செலுத்தப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்றுவந்த 25 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில், மாணவியின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த மாணவியின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.