இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் குறித்த சட்டம் தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இந்த சரத்துகளில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த திருத்தங்கள் இன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இணையவழி சட்டத்தின் பல பிரிவுகள் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.