தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  குறித்த சிறுமி நேற்று மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த சிறுமி மூன்றாவது பிள்ளையாவார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்​.

சம்பவத்துடன் தொடர்புடைய சில CCTV காட்சிகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 09 மணி முதல் இன்று அதிகாலை 03 மணி வரை சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், காலை 6.15 அளவிலேயே சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியும் மன்னார் மாவட்ட பதில் நீதவானும் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டு அங்கிருந்து செல்லும் போது, சிறுமிக்கு நீதி கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.