இலங்கை – இந்தோனேசியா இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்று வரும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஆகியோருக்கு இடையே நேற்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்தோனேசிய ஜனாதிபதி சிநேகபூர்வமாக வரவேற்றார்.

இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தியதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் 2 நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்டுக் மாநாட்டில் பங்குபற்றியதிலிருந்து காணப்படும், இலங்கை –  இந்தோனேசியா இடையிலான வரலாற்று உறவுகளை நினைவுகூர்ந்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இவ்வாறான மாநாடுகளின் முக்கியத்துவத்தையும் தௌிவுபடுத்தினார்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தோனேசிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

உலக நீர் உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீர் வள முகாமைத்துவத்தில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான நிதிச் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் உலகளாவிய கூட்டு நிதியத்தில் பங்கேற்க இலங்கை ஆர்வமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கூட்டுச்செயலகமொன்றை ஆரம்பித்தமைக்காக இந்தோனேசியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.