இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS உறுப்பினர்கள் என கூறப்படும் 4 இலங்கையர்களையும் இலங்கையிலிருந்து ஒஸ்மன் ஜெராட் என்பவரே வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒஸ்மன் ஜெராட் எனும் நபர் தனது உருவத்தை மாற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.
கடந்த 20ஆம் திகதி ISIS உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த 4 இலங்கையர்களும் அஹமதாபாத்தின் குஜராத் பிராந்தியத்தில் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் பல விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மொஹம்மட் நுஸ்ரத் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மற்றும் மின்சார சாதனங்களை கொண்டு வந்து கொழும்பில் விற்பனை செய்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
கொழும்பில் தங்கியிருந்த நுஸ்ரத் 2020 செப்டம்பர் 16ஆம் திகதி ஹெரோயின் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒருவராவார்.
மொஹம்மட் நப்ரான் இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான பொட்ட நஃப்ரின் மகனாவார்.
அவர் 16 வயதிலிருந்து இந்தியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தனது தாயாருடன் துணிகள் மற்றும் சொக்லேட் உள்ளிட்டவற்றை இலங்கையில் விற்பனை செய்து வந்துள்ளதுடன் 2017ஆம் ஆண்டு இரத்தினம் மற்றும் ஆபரண குற்றச்சாட்டுகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 2 உறுப்பினர்களான மொஹம்மட் பாரிஸ் மற்றும் மொஹம்மட் ரஸ்டீன் ஆகியோர் இந்தியாவிற்கு சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மொஹம்மட் பாரிஸ் புறக்கோட்டையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றியுள்ளதுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் 11ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 21ஆம் திகதி அவரது நண்பரான ஷமீர் அமீர் என்பவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.
மொஹம்மட் பாரிஸ் கடந்த 19 ஆம் திகதி இலங்கையிலிருந்து சென்னைக்கு சென்றுள்ளார்.
மொஹம்மட் ரஸ்டின் முச்சக்கர வண்டி சாரதியாவார்.
அவர் ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஒருவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
2022 செப்டம்பர் 16ஆம் திகதி கொழும்பு கரையோர பொலிஸாரால் மொஹம்மட் ரஸ்டின் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களே இவர்கள் என த ஹிந்து பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சியின் தாய் அமைப்பான RSS அமைப்பை குறிவைக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன.
பாகிஸ்தானில் ISIS தலைவராக செயற்படும் அபு என்பவரின் ஆலோசனைக்கு அமைய இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.