ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தத்தில் பங்குபற்றியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு புறப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மொஸ்கோவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனும் மாலை வேளையில் ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.