தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
இதன்போது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான எதிர்வரும் 16ம் திகதி மாலை 3.00மணியளவில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் புளொட் அமைப்பின் செயலதிபர் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்களது திருவுருவச்சிலை திறக்கப்படவிருப்பதுடன்,
மாலை 4மணியளவில் வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. வீரமக்கள் தினத்தை முன்னிட்டு அன்றுகாலை 10மணியளவில் நினைவில்ல வளாகத்தில் தாகசாந்தி நிலையமும் அமைக்கப்படவுள்ளது.