பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ். ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாளாந்த அடிப்படை வேதனமாக 1350 ரூபாவும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து ஏலவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இதனையடுத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டதுடன் வேதன நிர்ணய சபையில் நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் வேதன நிர்ணய சபையில் தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் நேற்று முன்தினம் வேதன நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் எதிர்த்திருந்தது.

இந்த நிலையில் கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி 1350 ரூபாய் என்ற நாளாந்த அடிப்படை வேதனத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.