ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.

தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் ஆயுர்வேத திணைக்களத்திலிருந்து ஆரம்பித்துள்ளதா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறான நியமனங்கள் ஊடாக அரச ஆயுர்வேத சேவை உள்ளடக்கிய அரச சேவையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகவும் ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.