அரசியலமைப்பு சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எதிர்க்கட்சி தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், அரசியலமைப்பு சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை கட்சிகளின் சார்பில் ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் எஸ்.ஸ்ரீதரனுக்கு 11 வாக்குகளும் ஜீவன் தொண்டமானுக்கு 10 வாக்குகளும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் தலைவர் பதவி, சபாநாயகருக்கு வழங்கப்படும்.

ஏனைய உறுப்பினர்களாகப் பிரதமர் மற்றும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் தெரிவு செய்யப்படுவார். அதேபோன்று ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரும், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரும் நியமிக்கப்படுவார்கள்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.