பொருளாதார நெருக்கடியிலிருந்து மாலைதீவை மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் (Abdulla Khaleel) இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(20) சந்தித்த போதே இதனை கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது. 
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி தொடர்பில் மாலைதீவு குடியரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் பின்னர் வலுவான நாடாக எழுச்சியடைந்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் இதன் மூலம் மாலைதீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாகவும் அப்துல்லா கலீல் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் இதன் போது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பிற்கு ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.