முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் மற்றும் இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் இதன்போது யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.